பதில் பிரதம நீதியரசர் ஒருவரை உடனடியாக நியமிக்கும்படி ஆளும் மக்கள் சுதந்திரக் முன்னணியின் பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக சாட்சியாளராகச் செல்வதற்கே பிரதம நீதியரசர் முயற்சிக்கின்றார் என்றும் அந்தக் கட்சி கூறியுள்ளது.
பத்தரமுல்லையிலுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிடும்போதே அக்கட்சியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்ஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக நாடாளுமன்றில் குற்றப் பிரேரணை கொண்டுவந்து அவரை பதவிநீக்கும் வரை, பதில் பிரதம நீதியரசரொருவரை ஜனாதிபதி நியமிக்கமுடியும். அதற்கான சட்டவரையறையும் இருக்கின்றது.
உலகில் இன்று நீதிமன்றங்களைவிட மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்றத்திற்கே அதிக அதிகாரங்கள் உள்ளன. இலங்கையின் தற்போதைய நாடாளுமன்றம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டுள்ளது.
குறிப்பாக, ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக சாட்சியாளராகச் செல்வதற்கே பிரதம நீதியரசர் முயற்சிக்கின்றார்.
அதேவேளை, சம்பந்தன் போன்றோர் கிளிநொச்சியில் நாடாளுமன்றத்தை உருவாக்க நினைத்தனர். எனவே, அவர்களுக்கு நாடாளுமன்றத்தின் அதிகாரம் குறித்து கரிசனை கிடையாது.
தம்மால் ஆட்சியமைக்க முடியாது என்பது ஜே.வி.பிக்குத் தெரியும். இலங்கையில் நீதி, சட்டம் ஒழுங்கில் சில தனிநபர்களது விருப்பு வெறுப்புகளுக்கு அமைவாக நீதித்துறை செயற்படுகின்றது.
இந்த நாட்டில் நடைபெற்ற கொடூர யுத்தத்தை வென்றெடுத்த பாதுகாப்புப் படையினருக்கு களங்கம் ஏற்படுத்தி அதற்காக ஒரு சர்வதேச விசாரணையை மேற்கொள்ளவே இந்த நாட்டிலுள்ள சிலர் முயற்சிக்கின்றனர். அவர்களின் வலையில் பிரதம நீதியரசரும் விழுந்துள்ளார்.
செலிங்கோ கிரடிட் கார்ட் வழக்கை விசாரித்துக்கொண்டிருந்த ஷிராணி திலக்கவர்தனவை அதிலிருந்து நீக்கி அந்த வழக்கு விசாரணையை ஷிராணி பண்டாரநாயக்க மேற்கொண்டார். இதனால் செலிங்கோவில் வைப்பிலிட்ட 900 பேருக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. மாறாக பிரதம நீதியரசர் செலிங்கா வீடமைப்புத் திட்டத்தில் வீடொன்றைப் பெற்றுள்ளார்.
அவருடைய கணவர் தேசிய சேமிப்பு வங்கியில் நிதிமோசடி செய்தபோது நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியினரும் ஜே.வி.பியினருமே பிரதம நீதியரசரின் பதவியை நீக்கி அவரது கணவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோஷமிட்டனர். அவர்கள்தான் இன்று பிரதம நீதியரசருக்கு ஆதரவாகப் பேசுகின்றனர்.
ஷிராணி பண்டாரநாயக்கவுக்குப் பின்னால் பாக்கியசோதி சரவணமுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சம்பந்தன் மற்றும் ஜே.வி.பி. உறுப்பினர்கள் நிற்கின்றனர் என அமைச்சர் விமல் வீரவன்ஸ மேலும் தெரிவித்தார்.