'சர்வதேசத்தின் அழுத்தம் ஊடாக ஒரு தீர்வுத்திட்டம் எங்களுக்கு மிகவிரைவில் கிடைக்கத்தான் போகின்றது. அந்தத் தீர்வுத்திட்டம் எவருமே தட்டிப்பறிக்க முடியாததாக இருக்கும். அது கிடைக்கும் வரைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டிய தேவை தமிழர்களாகிய அனைவருக்கும் இருக்கின்றது' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிட்ட மற்றும் வெற்றி பெற்ற உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:
'கிழக்கு மாகாணசபைத் தேர்தல் அறிவிக்கப்படும் போது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸானது தன்னுடன் இணைந்தே போட்டியிடும் என்று சிறிலங்கா அரசாங்கம் நினைத்திருந்தது. இந்த நப்பாசையிலேயே ஒரு வருடத்துக்கு முன்பாகவே மாகாணசபையைக் கலைத்து தேர்தலை சிறிலங்கா அரசாங்கம் அறிவித்தது.
ஆனால், கிழக்கு மாகாணத்தில் இருக்கும் முஸ்லிம் மக்கள், குறிப்பாக அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இருக்கும் முஸ்லிம் மக்கள் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு கொடுத்த அழுத்தம் காரணமாக அக்கட்சி தனித்துப் போட்டியிட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் தனித்துப் போட்டியிட்ட போதிலும் மாகாணசபை முறைமையானது வடகிழக்குக்கு எதற்காக கொண்டு வரப்பட்டதோ, அதனடிப்படையில் வடகிழக்கில் வாழுகின்ற தமிழ் பேசும் மக்களாக உள்ள முஸ்லிம்களும், தமிழர்களும் இணைந்து ஓர் ஆட்சியை அமைக்கலாம் என நாங்கள் முஸ்லிம் காங்கிரஸூக்கு அறிவித்திருந்தோம். கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியைக்கூட உங்களுக்கு தருகின்றோம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முஸ்லிம் காங்கிரஸ் தரப்பினருக்குக் கூறியிருந்தார்கள்.
ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் இன்று சிறிலங்கா அரசாங்கத்திடம் சலுகைகளுக்காக சோரம் போயிருக்கின்றது. அது மட்டுமல்ல திவி நெகும தாக்கம் பற்றி அனைவருக்கும் நன்றாகத் தெரியும். அந்தச் சட்டமானது 13வது அரசியல் சட்டம் ஊடாக கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற சொற்ப அதிகாரங்கள் மத்திய அமைச்சரவையில் உள்ள சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் கைகளுக்குள் நேரடியாகச் சென்றுள்ளது.
ஒரு கோழிக்குஞ்சைக் கூட வாங்கி வழங்க இந்த மாகாணசபையினால் முடியாது. அவ்வாறு வழங்குவது என்றாலும் மத்திய அரசில் உள்ள சிறிலங்கா அமைச்சர் பசில் ராஜபக்ச மூலமே அவற்றை வழங்கக் கூடியவாறு இந்தச் சட்டம் அவர்களிடம் சென்றுள்ளது.
இதற்காகத்தான் நாங்கள் தெளிவாகக் கூறியுள்ளோம். வடக்கு, கிழக்கு மாகாணசபையில் இருக்கின்ற சொற்ப அதிகாரங்களைக் கூட இல்லாமல் செய்கின்ற இந்தத் திட்டத்துக்கு தமிழ் பேசும் மக்களாக இருக்கக்கூடிய முஸ்லிம் காங்கிரஸ் தரப்பினர் நிச்சயமாக துணைபோகக்கூடாது எனக் கூறியிருந்தோம்.
ஆனால், இன்று என்ன நடந்துள்ளது என்றால் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திவி நெகும சட்டமூலத்தை ஆதரித்து வாக்களித்துள்ளது. அக்கட்சியின் செயலாளர் நாயகம் ஹசனலி தெளிவாகக் கூறியிருந்தார் இந்தச் சட்டமூலம் தொடர்பில் தாங்கள் பல பேச்சுகளை மேற்கொள்ள வேண்டும் என்று கால அவகாசத்தைக் கோரியிருந்தார்.
ஆனால், கால அவகாசம் இன்றி இந்தத் திட்டத்தை அவர்கள் ஒரு நாளிலேயே நிறைவேற்றியுள்ளனர். இது முஸ்லிம் காங்கிரஸ் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் பேசும் மக்களுக்கு செய்த மாபெரும் துரோகம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கூறிக்கொள்வதில் வேதனையடைகின்றேன். இந்த வேதனை என்பது எதிர்காலத்தில் முஸ்லிம் காங்கிரஸை முஸ்லிம் மக்கள் புறக்கணிக்கும் நிலை மிக விரைவில் வரும் என்பதை நான் இங்கு கூறிவைக்க விரும்புகின்றேன்.
நாங்கள் தமிழ்த் தேசியத்தின்பால் இருக்கின்றோம். எங்களுக்குள் பல கட்சிகள் இருக்கின்றன. ஒரு குடும்பத்தை எடுத்துக் கொண்டால் பல பிரச்சினைகள் இருக்கும். அது வழமை. எந்தப் பிரச்சினை வந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகவே இருக்கும். அது தொடர்பில் நீங்கள் எந்தவித கருத்து வேறுபாடுகளும் கொள்ளத் தேவையில்லை.
நாங்கள் இந்தக் கூட்டமைப்பு மூலமாக கடந்த 62 வருடகாலப் போராட்டங்கள், மாவீரர்களின் தியாகங்களை மதித்து எங்களது பயணங்களை மேற்கொள்கின்றோம். அந்தப் பயணத்தில் இறுதி இலக்கு என்பது நிச்சயம் வெற்றி பெற்றே தீரும்.
இந்த மகிந்த அரசு தமிழ் மக்களுக்கு எந்தத் தீர்வையும் தராது என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், சர்வதேசத்தின் அழுத்தம் ஊடாக ஒரு தீர்வுத்திட்டம் எங்களுக்கு மிகவிரைவில் கிடைக்கத்தான் போகின்றது. அந்தத் தீர்வை எவருமே தட்டிப்பறிக்க முடியாததாக இருக்கும். அது தீர்வு கிடைக்கும் வரைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டிய தேவை தமிழர்களாகிய அனைவருக்கும் இருக்கின்றது.
பல தேவைகள் இருக்கின்றன. அதேவேளை, பல தேர்ல்கள் வர இருக்கின்றன. நாங்கள் எங்களது பலத்தைக் காட்ட வேண்டிய சந்தர்ப்பத்தில் இருந்து கொண்டிருக்கின்றோம். நீங்கள் கிழக்கு மாகாணசபை தேர்தலில் எங்களை வெற்றி பெறவைத்துள்ளீர்கள். 2010ஆம் ஆண்டிலிருந்து ஒப்பிடுகையில் கிழக்கின் மூன்று மாவட்டங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி வீதம் உயர்ந்து கொண்டே செல்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டதால் தான் தாங்கள் முதலமைச்சர் பதவியை பெறமுடியாமல் போனதாக அரசகட்சியிலே போட்டியிட்ட தமிழர்கள் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் என்ன விடயத்தை வைத்து அவ்வாறு கூறுகின்றார்கள் என்று எங்களுக்குத் தெரியாது.
ஆனால், வெற்றிலையில் தமிழர்கள் சிலர் இணைந்து போட்டியிட்டதன் காரணமாகத்தான் தமிழ் முதலமைச்சர் ஒருவர் வரமுடியவில்லை என்பதை நீங்கள் அனைவரும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இதுதான் யதார்த்தம். இதனைப் புரிந்து கொள்ளாது எலும்பு இல்லாத நாக்கினால் எதனையும் கதைப்பது அரசியல் அல்ல. யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்' என அரியநேத்திரன் தனதுரையில் மேலும் தெரிவித்துள்ளார்.