இவ்வருட முற்பகுதியில் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் எனக் கருத்துகள் வெளியிடப்பட்டுவந்தபோதும் தற்போதைக்கு அமைச்சரவையில் எந்தவிதமான மாற்றங்களையும் மேற்கொள்ளாதிருக்க சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்திருப்பதாக நம்பகரமாகத் தெரியவருகிறது.
அரசியல் களத்தில் அரசு, பல நெருக்கடிகளைச் சந்தித்துவருகின்ற நிலையில், அமைச்சரவை மாற்றங்களை மேற்கொண்டால் அது ஆளுந்தரப்பு பங்காளிக் கட்சிகளிடையே கசப்பான மனவுணர்வுகளைத் தோற்றுவிக்கும். அத்துடன், இந்த இறுக்கமான சூழ்நிலையில் இது அரசுக்கு பெரும் சவாலான நிலைமைகளைத் தோற்றுவிக்கக்கூடும் என்பதைக் கருத்திற்கொண்டே ஜனாதிபதி மஹிந்த மேற்படி தீர்மானமொன்றை மேற்கொண்டுள்ளார் எனத் தெரியவருகின்றது.
பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை விவகாரத்தால் நிறைவேற்று, நீதி, சட்டவாக்கம் ஆகிய மூன்று துறைகளுக்குமிடையில் முரண்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் பல்வேறுபட்ட தரப்புகளிலிருந்தும் ஆளுந்தரப்புக்கு பல நெருக்கடிகள் ஏற்பட்டு வருகின்றன.
இந்தப் பின்னணியில் பிரதம நீதியரசரின் குற்றவியல் பிரேரணை விவகாரத்தால் நாட்டில் ஏற்பட்டுள்ள சர்ச்சையுடன் கூடிய குழப்பகரமான நிலைமைக்கு தீர்வொன்றைக் கண்டதன் பின்னரே அமைச்சரவையில் மாற்றத்தை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இவ்வருட முற்பகுதியில் மாகாணசபைத் தேர்தல்களும் வரவிருப்பதால், அமைச்சரவை மாற்றத்தை உடனடியாக செய்வது அனுகூலமற்றதென அரசு கருதுவதாகவும் தெரியவருகின்றது.