இலங்கையில் நிலவிய சீரற்ற காலநிலையால் மன்னார் மாவட்டத்தில் பெய்த அடைமழை மற்றும் மல்வத்து ஓயா பெருக்கெடுப்பால் ஏற்பட்ட வெள்ளத்தினாலும் மடு உதவி அரச அதிபர் பிரிவுக்குட்பட்ட குஞ்சுக்குளம் கிராம மக்கள் கடுமையாக பாதிப்படைந்திருந்தனர்.
இந்த நிலையில் மன்னார் மாவட்டச் செயலகத்தினால் குஞ்சுக்குளம் கிராமத்திற்கு படகுகள் மூலம் அனுப்பி வைத்த உலர் உணவுப்பொருட்களை அந்தக் கிராம மக்கள் திருப்பி அனுப்பிவைத்துள்ளனர்.
உலர் உணவுப்பொருட்கள் முழுமையாக வந்தடையாததன் காரணத்தினால் அவற்றை பகிர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவும், அதனால் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க அதிகாரிகள் அவற்றை திருப்பி அனுப்பிவைத்துள்ளனர் எனவும் அங்கிருந்து கிடக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மன்னார் மாவட்ட செயலகத்தினால் அறிவிக்கப்பட்ட தொகையையும் விட மிகவும் குறைவான உலர் உணவு பொருட்களே குஞ்சுக்குளம் கிராமத்திற்கு சென்றுள்ளது. இதற்கு குஞ்சுக்குளம் கிராம மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அவற்றை திருப்பி அனுப்பி மன்னார் மாவட்டச் செயலகத்தில் கையளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து உலர் உணவு பொருட்கள் அங்குள்ள அதிகாரிகளினால் மன்னாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த உலர் உணவுப் பொருட்கள் மன்னார் மாவட்டச் செயலாளரிடம் திருப்பி கையளிக்கப்படவுள்ளன அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகளவான நிவாரணப் பொருட்கள் முசலி பகுதிக்கே கொண்டு செல்லப்பட்டுள்ளன எனவும், நிவாரணப் பொருட்களை வழங்குவதில் அரச அதிகாரிகள் பாரபட்சம் காட்டுகின்றனர் எனவும் குஞ்சுக்குளம் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஊழல்கள் குறித்து உடனடியாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசெல்லவுள்ளோம் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முசலி பிரதேச செயலகப் பிரிவு மக்களுக்கான உலர் உணவுகளை 35 படகுகளில் மாவட்ட செயலகம் அனுப்பிவைத்துள்ளது என முசலி பிரதேசசபைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
மன்னார் சவுத்பார் மற்றும் வங்காலை கடற்பரப்பினூடாக இந்த உலர் உணவுகள் படகுகளில் முசலிப் பிரதேசத்துக்கு கடந்த சனிக்கிழமை கொண்டுவரப்பட்டுள்ளன என்று பிரதேசசபைத் தலைவர் கூறியுள்ளார்.