பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை குற்றவாளி என அறிவித்து அவரைத் தண்டிக்கும் சட்ட ஆணை, அதிகாரம் நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு இல்லை என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளை சட்டமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால் நிலையியற் கட்டளையின் பிரகாரம் அமைக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு சட்ட அதிகாரம் கொண்டதல்ல என உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது
அத்துடன், பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணையை விசாரணைக்கு உட்படுத்தியதன் பின்னர் நாடாளுமன்ற தெரிவுக்குழு எடுத்த தீர்மானங்கள் சட்டரீதியானவை அல்ல எனவும் இது தொடர்பான மனுவை விசாரித்துவரும் மேன்முறையீட்டு நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
உயர்நீதிமன்ற தீர்ப்பொன்றின் மூலம் நாடாளுமன்ற தெரிவுக்குழு இரத்துச் செய்யப்படும் என்ற அடிப்படையிலேயே நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.
இதற்கமைய நிலையியற் கட்டளை 78 (ஏ) உறுப்புரைக்கு அமைய நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு நீதவான் ஒருவருக்கு எதிரான தீர்மானங்களை மேற்கொள்வதற்கான அதிகாரமோ அல்லது சட்ட அங்கீகாரமோ இல்லை எனவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சட்டத்தரணி சாலிய பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நிலையியற் கட்டளை என்பது ஒரு சட்டம் அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அசியல் அமைப்பின் பிரகாரம் அதன் 125வது உறுப்புரைக்கு அமைய தனித்துவமான ஏகோபித்த சட்ட அதிகாரங்கள் உயர்நீதிமன்றத்தின் வசமே உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் உயர்நீதின்றம் இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளதாகவும் சட்டத்தரணி சாலிய பீரிஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் ரீட் மனுவை ஜனவரி 15ஆம் திகதி வரை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இந்த ரீட் மனு இன்று வியாழக்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேன்முறையீட்டு நீதிமன்றம் மேற்கண்டவாறு ஒத்திவைத்தது.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகித்த உறுப்பினர்கள் மற்றும் சபாநாயகர் ஆகியோரை நீதின்மன்றத்தில் இன்று சமூகம் அளிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் 21ஆம் திகதி அறிவித்திருந்தது.
அதேவேளை, பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவுக்கு எதிராக இடையீட்டு மனுவொன்று நேற்று புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசரின் ரீட் மனுவை செல்லுப்படியற்றதாக்க வேண்டும் என கோரியே இந்த இடையீட்டு மனுவை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தொழிற்சங்க சம்மேளனம் தாக்கல் செய்திருந்தது.