'தவறு செய்தவர் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டு அளித்த வாக்கமூலம், பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், குற்றம் சாட்டப்பட்டவர் சுயாதீனத்துடன் இந்த வாக்குமூலத்தை வழங்கினாரா என்பது தொடர்பில் நீதிமன்றத்தால் பரிசீலிக்கப்படவேண்டும். இந்த நடைமுறைகளைப் பின்பற்றாது யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு தண்டனை வழங்கப்படுவது சட்டத்துக்கு முரணானதாகும்.'
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
தீவிரவாதிகளின் வஞ்சக வலையில் தமிழ் இளைஞர்கள் சிக்கிக்கொள்ளக்கூடாது எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
சட்டத்துக்கு முரணான முறையில் கைதுசெய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்களுள் நால்வர் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்காக வெலிக்கந்தை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தாம் புனர்வாழ்வுபெற விரும்பியதாலேயே இவர்களுக்கு புனர்வாழ்பு அளிக்கப்படுகிறது என அரசு கூறுகின்றது.
நாட்டின் சட்டத்தில் இந்த நடைமுறைக்கு இடமில்லை. தவறு செய்தவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலமளித்தால் அது சாதாரண சட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் இது ஏற்றுக்கொள்ளப்படும். இருந்தபோதும் குற்றம் சாட்டப்பட்டவர் சுயாதீனமாக இந்த வாக்குமூலத்தை வழங்கினாரா என்பது நீதிமன்றத்தால் பரிசீலிக்கப்படும்.
இந்த நடைமுறைகளைப் பின்பற்றாது சட்டவிரோதமாக கைதுசெய்த யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு அரசு புனர்வாழ்வளிக்கிறது. இது சட்டத்துக்கு முரணானது. எனவே, இவற்றைக் கருத்திற்கொண்டு பாதுகாப்பு அதிகாரிகள் மாணவர்களை விடுவிக்கவேண்டும்.
தீவிரவாதிகளின் வஞ்சக வலையில் சிக்காது தமிழ் இளைஞர்கள் அவதானமாக இருக்கவேண்டும் என்று நான் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தேன். 'தீவிரவாதிகள் என்று நீங்கள் யாரைக் கூறுகிறீர்கள்' என்று பலர் என்னிடம் கேள்விகளைக் கேட்டனர். அவர்கள் தலைக்கு நான் கொடுத்த தொப்பி சரியாக இருந்தால் அவர்கள் அதை அணிந்துகொள்ளலாம். தீவிரவாதிகளிடமிருந்து தமிழ் இளைஞர்கள் விலகியிருக்கவேண்டும்.
இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.