அரசியல் தீர்வைத் தயாரிப்பதற்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொண்டிருந்தால் இந்நேரம் அது தொடர்பில் ஒரு முடிவை எட்டியிருக்கலாம் என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்றுத் தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
அரசியல் தீர்வை எட்டுவது தொடர்பில் அரசுடன் பேச வருமாறு நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்தோம். ஆனால் வரவில்லை. அதேபோல், அரசியல் தீர்வைத் தயாரிப்பதற்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுத்தோம். அதற்கும் வரவில்லை.
அரசியல் தீர்வை எட்டுவதற்கான செயற்பாடுகள் அனைத்திலும் இருந்து விலகிக்கொண்டு அரசியல் தீர்வைத் தாருங்கள் என்று வெளிநாடுகளிடம் கேட்பதில் அர்த்தமில்லை.
இந்த நாட்டுப் பிரச்சினையை இந்த நாட்டில்தான் தீர்க்கவேண்டும். வெளிநாடுகளில் அல்ல. தமிழ் மக்களுக்காகப் பேசுகிறோம் என்று கூறிக்கொண்டு தமிழ் மக்களை ஏமாற்றுகிறது கூட்டமைப்பு என்றார் அமைச்சர் நிமல் சிறிபால டி.சில்வா