போருக்குப் பின்னரான நிலைமைகள் குறித்து மதிப்பீடு செய்வதற்காக இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவைச் சோந்த நிபுணர் குழுவின் ஆலோசனையை ஏற்றுக்கொள்ள போவதில்லை என சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இது குறித்து கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது:
'அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் நிபுணர் குழு அடுத்த மாதம் கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
இவர்கள் அவதானிப்பாளர்களாகவே கொழும்புக்கு வரமுடியுமே ஒழிய, ஆலோசனைகளை வழங்க முடியாது. அவர்கள் கூறும் ஆலோசனைகளோ, வழிகாட்டுதல்களோ சிறிலங்கா அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தாது.
அரசாங்கம் தொடர்பில் விமர்சனங்களை முன்வைப்பவர்கள் வடக்குக் கிழக்கில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து நேரில் வந்து பார்வையிடுங்கள்.
இலங்கைக்கு வரும் ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் நிபுணர் குழு அறிக்கைகளை வெளியிடக் கூடும். ஆயினும் அதன் பரி;ந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டிய கடமைப்பாடு சிறிலங்கா அரசாங்கத்துக்கு கிடையாது. நாட்டின் இறைமையைத் தான் அரசாங்கம் எப்போதும் கவனத்தில் கொள்ளும்.
ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு மட்டுமன்றி, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கும், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவுக்கும் இலங்கைக்கு விஜயம் செய்து நிலைமைகளை நோரில் பார்க்குமாறு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது' என கெஹலிய ரம்புக்வெல மேலும் தெரிவித்துள்ளார்.