ஒரு அரசாங்கத்தை சரியான பாதையில் இட்டுச் செல்லும் முதன்மையான பணியை ஊடகங்கள் மேற்கொள்ள வேண்டும் என ஜேர்மனி சுட்டிக்காட்டியுள்ளது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் தேசிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஊடகங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதுடன், அரசாங்கம் மீதான விமர்சனங்களை தவிரத்துக் கொள்ள வேண்டும் என சிறிலங்கா ஊடக அமைச்சின் செயலாளர் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், சிறிலங்கா ஊடக அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள இக்கருத்தை நிராகரித்துள்ள சிறிலங்காவுக்கான ஜேர்மனியின் தூதுவர் ஜென்ஸ் பொலட்னர், அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டியது ஊடகங்களின் பொறுப்பாக கருதமுடியாது எனக் கூறியுள்ளார்.
ஊடகங்கள் அரசாங்கத்தை சரியான பாதையில் இட்டுச் செல்லும் கடமையை முதன்மையாக மேற்கொள்ள வேண்டும என்பதே தமது நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
'வடபகுதியில் படைத்தரப்பினரின் பிரசன்னம் குறைக்கப்பட்டு வருவதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளமை மகிழ்ச்சி அளிக்கின்றது. ஒருபகுதியில் அதிகளவு படைத்தரப்பினரை நிலை நிறுத்துவதனால் சில நேரங்களில் எதிர்விளைவுகள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுகின்றது.
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும்.
உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் சில பரிந்துரைகள் ஆக்கபூர்வமானதாக காணப்படுகின்றன. அவற்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம்.
நல்லிணக்க ஆணைக்குழுவின பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த கால அவகாசம் வழங்கப்பட வேண்டிய போதிலும் நாட்டு மக்களின் நன்மையைக் கருத்திற் கொண்டு சிறிலங்கா அரசாங்கம் கூடிய விரைவில் இப்பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது பொருத்தமான தீர்மானமாக அமையும்' என சிறிலங்காவுக்கான ஜேர்மனியின் தூதுவர் ஜென்ஸ் பொலட்னர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஊடக சுதந்திரத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் விடுத்து வரும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் சர்வதேச ரீதியில் பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.