இலங்கையில் முப்பது வருட காலமாக இடம்பெற்ற போர் முடிவடைந்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை இதுவரை காணாமை கவலை அளிப்பதாக சிறிலங்காவின் மூத்த அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
வடக்குக் கிழக்கு பெண்கள் தொடர்பில் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை சிறிலங்காவின் அமைச்சர் திஸ்ஸ விதாரணவிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று கண்டியில் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு குறிப்பிட்ட அறிக்கையைப் பெற்றுக் கொண்ட சிறிலங்கா அமைச்சர் திஸ்ஸ விதாரண உரையாற்றிய போதே இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார்.
'இலங்கையில் இடம்பெற்ற போரினால் பாதிக்கப்பட்ட பெண்களின் சமாதானம், பாதுகாப்பு, அபிவிருத்தி தொடர்பாக இலங்கை பெண்களுக்கான நிகழ்ச்சித் திட்டம்' என்ற பெயரில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவர் தனதுரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
'வடக்குக் கிழக்கு பெண்கள் தொடர்பில் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பால் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் மிகவும் பயனள்ளவை. இதனை நடைமுறைப்படுத்துவதில் நாம் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
முதலாவதாக கொழும்பு முதல் கிராமங்கள் வரை அதிகாரப் பகிர்வு முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதற்கு பாரிய நிதி ஒதுக்கப்பட வேண்டும். அவ்வாறான நிலை ஒன்று ஏற்பட்டால் மட்டுமே முழுமையாக தீர்மானம் எடுக்கும் சந்தர்ப்பம் பெண்களுக்கு கிடைக்கும்.
பல்லின சமூகம் வாழும் எமது நாட்டில் இனங்களுக்கு இடையிலும் சமூகங்களுக்கு இடையிலும் புரிந்துணர்வையும் சமாதானத்தையும் கட்டியெழுப்பினால் மட்டுமே பெண்களின் அபிவிருத்தியை பூரணமாக முன்னெடுக்க முடியும்.
உலகில் எந்த நாட்டில் போர் நடந்தாலும் எந்தக் காலத்தில் நடந்தாலும் அதனால் கூடுதலாகப் பாதிக்கப்படுவோர் பெண்களே. எனவே தீர்மானம் எடுக்கும் அமைப்புக்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும். எனது கருத்தின்படி ஆகக் குறைந்தது தேர்தல்களில் 30 சதவீதமான பெண்களுக்காவது சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும்' என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் சிறிலங்காவின் அமைச்சர் சுமேதா ஜயசேன, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஸி சேனாநாயக்க, சமாதானத்திற்கான நோபல் பரிவைப் பெற்ற லைபீரியவை சேர்ந்த லெமா கோபி, டிஸ்னி நிறுவனத்தை சேர்ந்த அல்பியன் டிஸ்னி, போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பின் பணிப்பாளர் சுமித்திரா ரத்நாயக்க, அதன் தலைவி விசாகா தர்மதாச உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.