தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் விடயத்தில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் ஆலோசனைகளைப் பெறுவதற்கு இலங்கை அரசு உத்தேசித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உள்நாட்டுப் பொறிமுறையை அடிப்படையாகக் கொண்ட தீர்வுக்கு மூன்றாந்தரப்பு மத்தியஸ்தம் அவசியமற்றது என உள்நாட்டில் எழுந்த கடுமையான எதிர்ப்புகள் காரணமாக அரசு தென்னாபிரிக்காவின் மத்தியஸ்தத்தை நிராகரித்தது.
எனினும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விடயத்தில் தென்னாபிரிக்காவுடன் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்கும், அந்நாட்டின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் இலங்கை அரசு தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியூடாக அதனைப் பெறுவதற்கான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிணங்க, தென்னாபிரிக்காவின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதற்காக அந்நாட்டின் ஆளும் கட்சியான ஆபிரிக்க தேசிய காங்கிரஸுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பேச்சு நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அடுத்த மாதம் முற்பகுதியில் தென்னாபிரிக்காவுக்கு விஜயம் செய்யும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இது விடயம் தொடர்பில் அந்நாட்டு அரசின் முக்கிய தலைவர்களைச் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார் எனத் தெரியவருகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சரும், அரசு - கூட்டமைப்பு பேச்சுக்குழுவின் உறுப்பினரென்ற அடிப்படையிலும் அவர் தென்னாபிரிக்கா செல்லவுள்ளார் என நம்பப்படுகிறது.