கடந்த மாதம் 27 ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 14 ஆவது தேசிய மாநாட்டில் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் ஆற்றிய பேருரை ஒளிப்பேழையாக வெளியீடு செய்யப்படவுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டக் கிளை இந்த ஒளிப்பேழையை வெளியீடு செய்கின்றது.
நாளைமறுதினம் சனிக்கிழமை காரைதீவு விபுலானந்தர் மணிமண்டபத்தில் நடைபெற இருக்கின்ற இந்த ஒளிப்பேழை வெளியீட்டு விழாவுக்கு காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் செல்லையா இராசையா தலைமை தாங்குவார். இதில் தமிழரசுக் கட்சியின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராசா பிரதம அதிதியாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டகளப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் மற்றும் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்துகொள்ளவுள்ளனர்.
அத்துடன் இந்நிகழ்வில் கௌரவ விருந்தினர்களாக கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சந்திரகாந்தன், தோமஸ் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த ஒளிப்பேளை வெளியீட்டு ஆய்வுரையை தமிழரசுக் கட்சியின் நிர்வாகக்குழு உறுப்பினரும் சட்டத்தரணியுமான பேரின்பம் பிறேம்நாத் நிகழ்த்துவார்.
இந்நிகழ்வுக்கு அனைத்து தமிழ் மக்களும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.