தமிழகத்தின் குன்னூர் வெலிங்டன் பயிற்சி மையத்தில் இடம்பெறவுள்ள படைத்துறைக் கருத்தரங்கை இரத்துச் செய்து சிறிலங்காவின் படை அதிகாரிகளை திருப்பி அனுப்ப வேண்டும் என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
வெலிங்டன் பயிற்சி மையத்தில் இன்று இடம்பெறுகின்ற படைத்துறைக் கருத்தரங்கில் போர்க்குற்றவாளியான மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் உள்ளிட்ட சிறிலங்கா படைத்துறை அதிகாரிகள் கலந்து கொள்ள குள்ளூர் சென்றுள்ளனர்.
அதனையடுத்து குன்னூரில் பதற்ற நிலை தோன்றியிருப்பதுடன், இவர்களுக்கு எதிராக ம.தி.மு.க.வினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அத்துடன், வெலிங்டன் பயிற்சி மையத்தை இன்று முற்றுகையிடவும் தமிழக அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் அழைப்பு விடுத்துள்ளன.
இந்நிலையில், இவ்விடயம் தொடர்பில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா எழுதிய கடிதத்திலேயே மேற்கண்டவாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
'சென்னை தாம்பரத்தில் பயிற்சி பெற வந்த சிறிலங்காவின் விமானப் படையினரை இந்தியாவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியிருந்த போதிலும், அவர்கள் வெளியேற்றப்படவில்லை.
இந்நிலையில் குன்னூர் வெலிங்டன் பயிற்சி மையத்தில் இடம்பெறும் கருத்தரங்கில் பங்கேற்க சிறிலங்காவின் படை அதிகாரிகள் வந்துள்ளனர். தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி சிறிலங்கா படைத்தரப்பினருக்கு பயிற்சிகளை வழங்கும் மத்திய அரசின் கடும் போக்கால் தமிழக மக்கள் கொந்தளிப்புடன் இருக்கின்றனர்.
குன்னூர் வெலிங்டன் பயிற்சி மையத்தில் இடம்பெறவுள்ள படைத்துறைக் கருத்தரங்கை இரத்துச் செய்து சிறிலங்காவின் படை அதிகாரிகளை திருப்பி அனுப்ப வேண்டும்.
அத்துடன், சிறிலங்கா படைத்தரப்பினருக்கான அனைத்துப் பயிற்சிகளைகளையும் இரத்துச் செய்ய மத்திய பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவுறுத்த வேண்டும்' என இக்கடித்தில் முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.