சூடானுக்கும், சிறிலங்காவுக்கும் இடையிலான படைத்துறை உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வது தொடர்பில் இவ்விரு நாடுகளும் இணக்கம் கண்டுள்ளன.
சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சூடானுக்கு ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சென்றிருந்த போதே இந்த இணக்கம் காணப்பட்டுள்ளது.
சூடானுக்கு கடந்த 26ஆம் திகதி விஜயம் செய்த சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தனது பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று நாடு திரும்பியுள்ளார்.
சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சவுடன் படைத்தரப்பின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க, புலனாய்வுச் சேவையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் சூடானுக்கு விஜயம் செய்திருந்தனர்.
சூடான் படைத்துறை அமைச்சர் அப்துல் ரகீம் முகமட் ஹூசைன், படைத்துறைச் செயலாளர் ஜெனரல் அப்துல் ரஹ்மான் முகமட் சய்ன், படைத்தரப்பின் பிரதித் தலைமை அதிகாரி ஜெனரல் இமாட் அடாவி மற்றும் கூட்டுப் படைகளின் தளபதி ஜெனரல் இஸ்மத் அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட பலருடனும் கோத்தபாய ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா தரப்புக் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அத்துடன், சூடான் படைத்தரப்பின் முக்கிய பயிற்சி நிலையங்கள் மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கும் விஜயம் செய்த இக்குழுவினர், சூடான் படைத்தரப்பின் உயரதிகாரிகளை சிறிலங்காவுக்கு விஜயம் செய்யுமாறும் அழைப்பு விடுத்துள்ளனர்.
அதேவேளை, 'தீவிரவாதத்தை தோற்கடித்தமை மற்றும் புனர்வாழ்வு, புனரமைப்பு, நல்லிணக்கம் ஆகியவற்றில் சிறிலங்காவின் அனுபவங்கள்' எனும் பொருளில் சூடானின் முக்கியமான கார்ட்டூம் படைத்துறைக் கல்லூரியில் சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச உரையாற்றியுள்ளார்.
இவ்விஜயத்தின் இறுதியில் இவ்விரு நாடுகளின் படைத்துறையினருக்கு இடையில் பயிற்சிகளை வலுப்படுத்திக் கொள்வது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்;பட்டுள்ளது.