சிறிலங்காவின் புதிய சட்டமா அதிபராக சொலிஸ்டர் நாயகம் பாலித பெர்ணான்டோ ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் முன்னிலையில் இன்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். இந்நிகழ்வில் சிறிலங்கா ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் கலந்து கொண்டிருந்தார்.
சிறிலங்காவின் பதில் சட்டமா அதிபராக இதுவரை செயற்பட்டு வந்த பாலித பெர்ணான்டோவை சட்டமா அதிபராக நியமிப்பதற்கு நாடாளுமன்ற சபை கடந்த 12ஆம் திகதி அங்கீகாரம் வழங்கியிருந்தது.
சிறிலங்காவின் நாடாளுமன்ற சபை கடந்த 12ஆம் திகதி கூடிய போது சபாநாயகர் சாமல் ராஜபக்ச, பிரதமர் டி.எம்.ஜயரத்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.
சிறிலங்காவின் 18வது அரசியலமைப்பு திருத்ததிற்கு அமைவாக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற சபையில் சபாநாயகர், பிரதமர், ஆளுங்கட்சி பிரதிநிதி ஒருவர் ஆகியோருடன், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் எதிர்க்கட்சியின் பிரதிநிதி ஒருவரும் அங்கத்துவம் வகிக்கின்றனர்.
எனினும் கடந்த 12ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற சபைக் கூட்டத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.
முன்னாள் சட்டமா அதிபர் ஈவா வனசுந்தர உயர்நீதிமன்ற நீதியரசராகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதை அடுத்து சட்டமா அதிபர் பதவி வெற்றிடமாக இருந்தது. இதனையடுத்து சொலிஸ்டர் நாயகம் பாலித்த பெர்ணான்டோ பதில் சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டிருந்தார்.
கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான இவர், 1979ஆம் ஆண்டில் சட்டத்தரணியாக பதவிப் பிரமானம் செய்து கொண்டமை தெரிந்ததே.