Pongu Tamizh Pongu Tamizh Pongu Tamizh  

சம்பந்தரின் பாராளுமன்ற உரை: சொன்னதும் விளங்கிக் கொள்ளப்பட்டதும்

சம்பந்தரின் பாராளுமன்ற உரை: சொன்னதும் விளங்கிக் கொள்ளப்பட்டதும்
யதீந்திரா

 

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்களின் அண்மைய நாடாளுமன்ற உரை தொடர்பாக கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டுவரும் சூழலில் இக்கட்டுரை வெளியாகிறது. சம்பந்தனின் உரை குறித்த மாற்றுக் கருத்துகளுக்கு பொங்குதமிழ் இடம்தரும். – ஆசிரியர்

***

இம்மாதம் 7ம் திகதி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் தமிழ் மக்களின் அரசியல் தலைவராகவும் கருதப்படும், இராஜவரோதயம் சம்பந்தன் அவர்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆங்கிலத்தில் இடம்பெற்ற இவ்வுரையில் சம்பந்தர் பயன்படுத்திய சில சொற்களே அவர் மீதான விமர்சனங்களுக்கான காரணமாகும். குறிப்பாக புலம்பெயர் சூழலில் தங்களை புலிகளின் அனுதாபிகள் என்று கருதிக் கொள்ளுவோர் இவ்வாறான விமர்சனங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

விமர்சனங்களுக்கு அப்பால் சம்பந்தர் ஒரு துரோகி என்னும் வகையிலும் இவர்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். தமிழ் சூழலில் துரோகி என்பது நகைச்சுவைக்குரிய ஒன்றாக இருப்பதால், அது குறித்து இப்பத்தி அலட்டிக் கொள்ளவில்லை. சம்பந்தர் முன்னரும் புலிகளின் துரோகிப் பட்டியலில் இருந்த ஒருவர்தான். நீலன் திருச்செல்வம் துரோகி என்னும் அளவுகோலின்படி படுகொலை செய்யப்பட்ட பின்னர், அடுத்த இலக்கு சம்பந்தர்தான் என்னும் நிலைமை அன்றிருந்தது. சம்பந்தர் விடுதலைப்புலிகளுக்கு பயந்து, தனது உயிரை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் பலமான பாதுகாப்புடன் இருந்த கதை பலரும் அறிந்த கதையும் கூட.

ஆனால், அதே இரா.சம்பந்தன் பின்னர் பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமாக இருந்து பேசுவது போன்ற புகைப்படங்கள் ஊடகங்களில் அடிக்கடி பிரசுரமாகிக் கொண்டிருந்தன. எந்த பிரபாகரனுக்கு பயந்து சம்பந்தன் குண்டு துளைக்காத வாகனத்தில் பயணித்தாரோ, பின்னர் அதே பிரபாகரனுக்கு அருகில் இருந்து, சம்பந்தன் அரசியல் பேசும் நிலைமை தோன்றியது. அரசியலை ஒரு சினிமா போன்று பார்த்துப் பழகிய தமிழ் சனங்களோ, தம்பியும் ஐயாவும் - அண்ணையும் ஐயாவும் - என்று சாதாரணமாக கடந்து சென்றனர். 'சம்பந்தர் ஒரு பெறுமதியான ஆள், இவரை நாங்கள் பாதுகாக்க வேண்டும்' என்று பிரபாகரன் சொன்னதாகவும் அன்று கதைகள் உலவின. வன்னிச் சூழலில் குறிப்பாக புலிகளின் அரசியல் பிரிவினர் மத்தியில் சம்பந்தன் சரக்குள்ள ஆள் என்னும் அபிப்பிராயம் நிலவியது. இதன் தொடர்ச்சி அதுவரை புலிகளால் துரோகியாக பார்க்கப்பட்ட மிதவாத தலைவரான சம்பந்தன் ஐயா தேசாபிமானியாக உருமாறினார். இதன் பின்னர் தெற்கின் அரசியல் அரங்கிலோ மிதவாதத் தலைவரான சம்பந்தன் விடுதலைப் புலியாக அறிமுகப்படுத்தப்பட்டார். இன்றுவரை அது தொடர்கிறது. இத்தகையதொரு பின்புலத்தில்தான், சம்பந்தர் மேற்படி சர்ச்சைக்குரிய உரையை ஆற்றியிருக்கிறார். எனது பார்வையில் அது ஒரு சர்ச்சைக்குரிய உரையல்ல, ஆனால் குறித்த உரையை சிலர் சர்ச்சைக்குரிய ஒன்றாக நோக்குவதன் காரணமாகவே நான் அதனை இங்கு அழுத்தியிருக்கின்றேன்.

அப்படியென்ன சம்பந்தர் தனது உரையில் குறிப்பிட்டுவிட்டார்? - சம்பந்தர் தனது உரையின்போது குறிப்பிட்டிருந்த, விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகளாக நோக்கப்பட்டனர் மற்றும் தமிழ் மக்கள் வடக்கு கிழக்கிலிருந்து இராணுவத்தை முழுமையாக வெளியேறச் சொல்லிக் கோரவில்லை ஆகிய இரண்டு விடயங்களே இன்று சிக்கலானதாக நோக்கப்படுகிறது. 2013இற்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தில் பங்குகொண்டு உரையாற்றியபோது மேற்படி விடயங்களை சம்பந்தர் தெரிவித்திருந்தார். மேற்படி பாராளுமன்ற விவாதம் பாதுகாப்பு அமைச்சின் தலைமையில் இடம்பெற்றிருந்தது. சம்பந்தரும் உரையை ஆரம்பிக்கும் போதே பாதுகாப்பு விவகாரம் ஒன்றுடனேயே தனது பேச்சை ஆரம்பித்திருந்தார்-

'…. இங்கு சிலர் மத்தியில் ஒரு தவறான நம்பிக்கை (Mistaken believes) நிலவுகிறது. அதாவது தமிழ் மக்கள் இராணுவம் வடக்கு கிழக்கிற்கு வெளியில் செல்ல வேண்டுமென்று கூறிவருவதாக சிலர் கருதுகின்றனர். ஆனால் அது தவறானது. இராணுவம் இந்த நாடு முழுவதும் எவ்வாறு இருக்கிறதோ அப்படி இருக்கலாம். ஆனால் தமிழ் மக்களை ஒடுக்கும் (oppressive) மற்றும் கட்டுப்படுத்தும் (subjugate) நோக்கத்துடன் இராணுவம் வடக்கு கிழக்கில் நிலைகொண்டிருக்கக் கூடாதென்றே நாங்கள் கூறிவருகின்றோம். தமிழ் மக்கள் தாங்கள் இந்த நாட்டில் சமத்துவமான பிரஜைகளாக (Equal citizens) நடத்தப்படவில்லை என்றவாறு உணராத வகையிலும், தாங்கள் தரக்குறைவான பிரஜைகளாக நடத்தப்படுவதாகவும் உணராத வகையில் இராணுவப் பிரசன்னம் அமைந்திருக்க வேண்டும். தமிழ் மக்கள் தங்களது சுயகௌரவத்தையும் சுயமரியாதையையும் பிரயோகித்து வாழக்கூடிய சூழல் இருக்க வேண்டும். எனவே இதனைக் கருத்தில்கொண்டு வேலைகளுக்கு தேவையான அளவிலும், ஏற்றுக் கொள்ளக் கூடியதுமான அளவிலும் இராணுவத்தினர் நிலைகொள்ளலாம் - இலங்கையின் ஏனைய பகுதிகளில் இருப்பது போன்ற அடிப்படையில்…'

இராணுவ வெளியேற்றம் தொடர்பாக சம்பந்தர் கூறிய விடயங்கள் இவ்வளவே! அடுத்து சம்பந்தர் தெரிவித்த கருத்துக்கள் விடுதலைப்புலிகள் தொடர்பானவை –

'…தமிழ் மக்களின் போராட்டத்திற்கு ஒரு நீண்ட வரலாறுண்டு. எங்களது போராட்டத்தின் பின்னால் மிகவும் நியாயபூர்வமானதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதுமான மனக்குறைகள் இருந்தன. அவைகள் இந்த நாட்டின் முன்னோடி தலைவர்களாகக் கருதப்படும், எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க மற்றும் டட்லி சேனநாயக்க ஆகியோரால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. அன்று மேற்கொள்ளப்பட்ட பண்டா-செல்வா ஒப்பந்தம், டட்லி-செல்வா ஒப்பந்தங்கள் அமுல்படுத்தப்பட்டிருக்குமானால் இந்த நாடு இன்றிருக்கும் நிலையில் இருந்திருக்காது. நாங்கள் ஒருபோதும் வன்முறையான மக்களாக இருந்திருக்கவில்லை. ஆனால் வன்முறை தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டது. எங்களது நியாயமான ஏற்றுக்கொள்ளக் கூடிய கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு, தமிழ் மக்களுக்கு எதிரான நிகழ்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதொரு சூழலில்தான் தமிழீழ விடுதலைப்புலிகள் வெளிவந்தனர் (Emerged). 

தமிழ் மக்களால் சாத்வீக வழியில் முன்வைக்கப்பட்ட நியாயபூர்வமான கோரிக்கைகள் இலங்கையை ஆட்சிசெய்த வெற்றிகரமான ஆட்சியாளர்களால் உள்வாங்கிக் கொள்ளப்படாமையின் காரணமாகவே புலிகள் உருவாகினர். மாறாக விடுதலைப்புலிகளை தமிழ் மக்கள் உருவாக்கவில்லை. விடுதலைப்புலிகளின் வெளிவருகைக்கு நியாயபூர்வமான காரணங்கள் இருந்தன. இதனை எவரும் நிராகரிக்க முடியாது. விடுதலைப்புலிகள் சாதாரண மக்கள் (Civilians) மீது தாக்குதல் மேற்கொண்டபோது, அவர்கள் பயங்கரவாத அமைப்பு என்னும் (In terms of terrorist organization) கருத்து வகைக்குள் வந்தனர். அவர்கள் சாதாரண தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களை கொன்றுள்ளனர். மக்கள் தலைவர்களை கொன்றுள்ளனர். இதன்போது அவர்கள் பயங்கரவாத வகைப்படுத்தலுக்குள் கொண்டு வரப்பட்டனர்.

விடுதலைப்புலிகள் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை மதித்து நடக்கவில்லை. சிலர் விடுதலைப்புலிகளை அழித்ததாக பறைசாற்றுகின்றனர். ஆனால் நான் சொல்லுவேன் - விடுதலைப்புலிகள் தங்களை தாங்களே அழித்துக் கொண்டனர். அவர்கள் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் அவதானித்து நடக்காமையின் காரணமாகவே அழிந்தனர். இதுதான் உண்மை. காலம்சென்ற வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் விடுதலைப்புலிகளின் சர்வதேச கட்டமைப்புக்களை பலவீனப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியவர். விடுதலைப்புலிகளை அழிப்பதற்கான சர்வதேச ஆதரவை பெற்றுக் கொள்வதில் முக்கிய பங்காற்றியவர். ஆனால் அவர் இன்று எங்களுடன் வாழ்ந்திருந்தால், இன்று நடைபெறும் பல்வேறு விடயங்களை எண்ணி மிகவும் பயங்கரமான உணர்வுக்கு ஆட்பட்டிருப்பார். இன்று நீங்கள் எங்களை விடுதலைப்புலிகளுடைய பதிலி (proxy) அமைப்பு என்று குறிப்பிடுகின்றீர்கள் - ஆனால் விடுதலைப்புலிகள் எங்களின் தலைவரை கொன்றவர்கள். எனது நண்பர்களை கொன்றவர்கள். நான் அவர்களது 'அழித்தொழிக்க வேண்டியவர்களின்' பட்டியலில் இருந்தவன். நாங்கள் எப்படி விடுதலைப் புலிகளின் பதிலி அமைப்பாக இருக்க முடியும். அன்றைய சூழலில் ஒரு அமைதியான சூழலுக்காக நாங்கள் ஒத்துழைத்திருந்தோம்.. '

இவைகள்தான் சம்பந்தரது உரையின் சர்ச்சைக்குரிய பகுதியாக நோக்கப்படுகிறது. முதலாவது வடக்கு கிழக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவது தொடர்பில் சம்பந்தர் குறிப்பிட்டிருக்கும் கருத்துக்கள் மிகவும் யதார்த்த பூர்வமானது. போர் முடிவுற்ற சூழலில் குறிப்பிட்ட பகுதிகளில் இயல்புநிலையை ஏற்படுத்துவதில் இராணுவ நீக்கம் (de-militarization) முக்கியமானது. இங்கு இராணுவ நீக்கம் என்பது இராணுவமே வடக்கு கிழக்கில் இருக்கக் கூடாது என்பதல்ல. இதனைத்தான் சம்பந்தர் குறிப்பிட்டிருக்கின்றார். ஒரு ஜனநாயக நிர்வாக பொறிமுறையில் இராணுவத்திற்கு என்ன இடமோ, அத்தகையதொரு இடத்தில் இராணுவம் இருக்க முடியும் என்பதுதான் சம்பந்தரின் வாதம். இது தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்தவர்கள் விடயத்தை கூர்ந்து கவனிக்கவில்லையா அல்லது எப்படியாவது சம்பந்தரை விமர்சிக்க வேண்டுமென்னும் உள்நோக்கத்துடன் விமர்சித்திருக்கின்றனரா? இராணுவ நீக்கம் என்பது, முழுமையான இராணுவ வெளியேற்றம் அல்ல என்பதை விளங்கிக் கொண்டவர்களுக்கு சம்பந்தரின் கூற்று பிரச்சனைக்குரிய ஒன்றாக இருக்காது.

அடுத்து சம்பந்தர் விடுதலைப்புலிகள் பற்றி குறிப்பிட்டிருக்கும் கருத்துக்கள் எவையும் ஆச்சரியமானதல்ல. சம்பந்தரின் பாராளுமன்ற உரையின் வீடியோ ஆவணத்தை உற்று நோக்கினால் ஒரு விடயத்தை கவனிக்கலாம். சம்பந்தர் மேற்படி கருத்துக்களை மிகவும் நிதானமாகவும் தெளிவாகவுமே முன்வைத்திருக்கின்றார். முன்கூட்டிய தயாரிப்புடன்தான் அவர் விவாதத்திலும் பங்குகொண்டிருக்கின்றார். விடுதலைப் புலிகள் ஒரு சர்வதேச பயங்கரவாத அமைப்பு என்பதுதான் சர்வதேச பார்வை. இது குறித்து தமிழர்கள் என்ன கருதுகின்றார்கள் என்பது வேறு விடயம். ஆனால் இங்கு சம்பந்தர் விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகளாக குறிப்பிடவில்லை. ஆனால் சாதாரண மக்கள்மீது தாக்குதல்களை மேற்கொண்ட போது, ஜனநாயக தலைவர்களை கொலைசெய்தபோது, விடுதலைப்புலிகள் பயங்கரவாத அமைப்பு என்னும் வகைப்படுத்தலுக்குள் கொண்டு வரப்பட்டனர் என்றே குறிப்பிட்டிருக்கின்றார். இது ஒரு பாரதூரமான கருத்தாக நான் பார்க்கவில்லை. இத்தகையை கண்ணோட்டத்தில் ஏலவே பலரும் எழுதியிருக்கின்றனர். இங்கு ஒரு விடயத்தை கவனிக்கலாம் - சம்பந்தர் தன்னை புலிகளுடன் தொடர்புபடுத்துவதை கண்டிக்கும் வகையிலேயே தனது உரையை ஆற்றியிருக்கின்றார். அவர் மீண்டும் நாங்கள், நான் என்று சொல்வதிலிருந்து, அவர் தமிழரசுக் கட்சியினது நிலைப்பாட்டையே எடுத்தியம்பியிருக்கின்றார்.

சம்பந்தரின் உரை ஏற்படுத்தியிருக்கும் சலசலப்புக்களை உற்றுநோக்கும் போது ஒரு விடயம் தெளிவாகிறது – தமிழர்கள் இன்னும் திருந்தவில்லை அல்லது திருந்த விரும்பவில்லை. விடுதலைப்புலிகள் குறித்த உலகளாவிய பார்வை என்னவென்று பல தடவை இப்பத்தியாளர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். எனவே அதனைக் கருத்தில் கொண்டு சிந்தித்தால் இன்று எழுந்திருக்கும் சர்ச்சைகளும் விமர்சனங்களும் அர்த்தமற்றவை என்பதே இப்பத்தியின் கணிப்பு. விமர்சனங்கள் மிகவும் தேவை ஆனால் அவை யதார்த்த பூர்வமான விமர்சனங்களாக இருக்க வேண்டும். எனவே இங்கு உணர்ச்சிவசப்படுவதை விடுத்து சிந்தித்து செயல்படுவதே முக்கியமானது.

12/16/2012 8:13:31 AM

நண்பருக்குப் பரிந்துரைக்க:


முந்தய பதிவுகள்


உங்கள் கருத்துக்களை பதிவு செய்க:

வாசகர் கருத்து:

ஐயா உலகம்தனது தேவைஜின் அடிப்படைஇல் உளறும். நீங்கள் அந்த அளவுகோலை நீங்கள் தூஊக்கினால் அவர்களின் பயங்கரவாதம் எத்தகயது என்பது ஏன் உங்களுக்கு தெரியவில்லை. விழுந்தபாட்டுக்கு குறி சுட வேண்டாம். அருவரிப்பிள்ளைக்கு பாடம் எடுப்பதைப்போலுள்ளது. விடுதலைப்புலிகள் இல்லாதபோது தமிழ்மக்கள் செல்லவேண்டிய பாதையை செப்பணிடுங்கள். நன்றி.
Ramanan, St.gallen
சம்பந்தரது நாடாளுமன்ற உரைக்கு இதுவரை ஏராளமானவர்கள் பொழிப்புரை எழுதிவிட்டார்கள். இன்னமும் எழுதி வருகின்றார்கள். ஆனால், இப்போதும் புத்தி பேதலிக்காத, வாழ்வு நிலையில் இருக்கும் சம்பந்தர் இன்றுவரை அது குறித்த எந்தக் கருத்தினையும் தெரிவிக்கவில்லை.

இது ஒரு வேடிக்கையான அனுபவமாகவே உள்ளது. தன்மீது பாரிய அளவிலான குற்றச்சாட்டுகள், அதுவும் தமிழ் மக்களால் முன்னைக்கப்படுகின்ற நிலையில், தமிழ் அரசியல் தளத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் சம்பந்தர் அது குறித்துக் கண்டு கொள்ளாமலேயே இருக்க முடியாது. அப்படி அவரது நிலை தொடருமானால், அவர் புத்தி பேதலித்த, அல்லது தன்னியக்கமற்ற நிலையில் இருப்பதாகவே கருத முடியும். அவரது உரைக்குப் பொழிப்புரை எழுதுபவர்கள் முதலில் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.

சம்பந்தரது உரைக்கான நியாயங்கள் போலவே, ஓரளவிற்கான நியாயங்கள் கொலைகாரனிடமும், கொள்ளைக்காரனிடமும் கூட இருக்கலாம். அவ்வாறான நியாயப்படுத்தல்களால் தவறுகள் எல்லாவற்றையும் சரி செய்துவிட முடியாது.

இக்கட்டான ஒரு காலகட்டத்தில் தந்தை செல்வா அவர்கள் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்து, தேர்தல் ஒன்றின் மூலம் தனது எண்ணங்களுக்கான மக்களது ஆணையைப் பெற்றார். ஜனநாயகத்தைப் பேண விரும்பும் சம்பந்தரும் அந்தப் பாதையில் பயணித்து, தமிழ் மக்களிடம் தனது கருத்தினை முன் வைப்பது மட்டுமே அவர் மீதான விமர்சனங்களுக்கும் குற்றச்சாட்டுக்களுக்கும் முடிவுரையை வழங்கும்.

S. Balachandran, Le Blanc Mesnil
புலிகளைப்பற்றி தனது இருப்புக்காக சிங்கள அரசாங்கம் பேசியே ஆகவேண்டும். சம்பந்தர் எதற்காகப் பேசவேண்டும்?. சம்பந்தர் ஈழத் தமிழின விடுதலைக்காக அந்நாட்டு மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு தலைவர். அவர் தமிழின விடுதலைக்கான அரசியல் வழிகளை தோற்றுவிக்க வேண்டுமே தவிர புலிகள் புராணம் பாடவேண்டிய அவசியமில்லை. ஆனால் அவரோ புலிகள்பற்றிப் பிரஸ்தாபிக்காமல் அரசியல் செய்ய முடியாதெனவும், சிங்கள அரசின்கீழ்தான் தமிழினம் வாழமுடியும் எனவும் வலியுறுத்த முற்படுகிறார். ஒரு தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கம் தனது நாட்டில் செயல்படுவதற்குத் தடைசெய்த நாடு ஒருபோதும் அனுமதிக்காது என்பதே நடைமுறை. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதப் பட்டியலில் இட்டுத் தடைசெய்த நாடுகளில் சிறீலங்காவையும், இந்தியாவையும் தவிர்ந்த ஏனைய நாடுகள் அனுமதிக்கிறதே!! தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயரிலேயே அங்குள்ள தமிழர்கள் சுந்திரமாகச் செயல்பட அனுமதிப்பதன் சூட்சுமம் என்ன?. இதனை உணர்ந்தாவது நாங்கள் புலிகளை விமர்ச்சிப்பதை நிறுத்தவேண்டும். முக்கியமாக தமிழ்த் தலைவர்கள் நிறுத்தவேண்டும்.
Mahendra, Hemmingen
தந்தை செல்வா அவர்கள் தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டுமென்று கடவுளை வேண்டியது எதற்காக? சிங்கள அரசியல்வாதிகளிடம் எந்தவகையிலும் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது! அதனிடம் தமிழினம் நீதி கேட்டால், அது நீதிகேட்கும் இனத்தையே அனித்துவிடும் என்பதை அவர் நன்றாக உணர்ந்திருந்தார். கடவுளும் அவர் பிராத்தனையை ஏற்று பிரபாகரனை உருவாக்கிவிட்டதாக ஏன் கொள்ளமுடியாது?. தமிழருக்கு உரிய உரிமையைக் கொடுப்பதற்கு பிரபாகரன் சிங்களத்தை வழிக்கு கொண்டுவந்ததை எல்லோரும் அறிவோம். ஆனால் அதனைச் சிதைக்கும் வகையில் கதிர்காமர் உலகநாடுகளில் செயல்பட்டபோது ஆனந்தசங்கரி, சம்பந்தர் போன்ற தமிழ்த் தலைவர்கள் என்ன செய்தார்கள்?. தமிழ் மக்களுடைய வாழ்வாதார உரிமையை உறுதிப்படுத்திவிட்டு புலிகளை பயங்கரவாதப் பட்டியலில் இடுங்கள் என்றாவது அந்த நாடுகளைக் கேட்டிருக்கலாமே?. அதனைச் செய்யக்கூடிய தகுதி அவர்களுக்கு இருக்கவில்லையா?. கதிர்காமர் தனது நண்பர் என்று சம்பந்தர் கூறுகின்றார். கதிர்காமரிடமாவது சம்பந்தர் இதனை வலியுறித்தியிருக்கலாமே?. ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் என்றால் என்னவென்றே அறியாத நிலையில் சிங்கள அரசுகள் உள்ளபோது, விடுதலைப்புலிகள் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை மதித்து நடக்கவில்லை என்று கூறுவதால் சம்பந்தர் எதனைச் சாதிக்கப்போகிறார்?. சம்பந்தர் ஜனநாயக வழிநடந்தால் சிங்களம் தமிழர் உரிமையை கூடையில் அள்ளிக் கொடுத்துவிடுமா?. சிங்களவருடன் தமிழர் சேர்ந்துவாழ முடியாது! இது அனுபவம் தந்த பாடம்! என்று அடித்துச்சொல்ல சம்பந்தரால் ஏன் முடியவில்லை. சொன்னால் சிங்களத்திற்கு கோபம்வருமா? தமிழனை அழித்துவிடுமா? இப்போதுமட்டும் என்ன நடக்கிறது?. சிங்களவனை மனிதனாக தந்தை செல்வா கண்டிருந்தால்! அவர் கடவுளிடம் வேண்டுதல் செய்திருக்கமாட்டார். புதிய அரசு ஒன்றுதான் தமிழர்களைக் காப்பாற்றும் என்று கூறியிருப்பார்.
Mahendra, Hemmingen
தமிழர்களின் எதிர் காலம் அரசியல் இருப்பை உறுதி படுத்த இனவாதிகள் தமிழ் தேசிய கூட்டணிக்கு போட்டு விட்ட புலி முகமூடியை விட்டு வெளியே வந்தாக வேண்டும் என்கிற நிலை இருக்கும் போது அவர் எப்படி பேச வேண்டும் என்று எதிர் பார்க்கிறார்கள் புலி முத்திரை குத்தி இனவாதிகள் போக்கு காட்டுவதை தவிர்க்க இதை தவிர வேறு வழி இருப்பதாக தெரிய வில்லை
PREMA, CHENNAI
 
ஒலிப்பதிவுகள்
  • மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

மாணவர் போராட்டமே தமிழக முதல்வரை தீர்மானத்தை முன்மொழியத் தூண்டியது! - பா.செயப்பிரகாசம் (தமிழ் 3 வானொலி -27.03.13)

  • இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

இனி வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை! - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேர்காணல் (ரூபன் சிவராஜா)

  • பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

பொங்குதமிழ் இணையமும் கூடங்குளம் செய்திகளும் இணைந்து நடத்திய சுப.உதயகுமார் அவர்களுடனான நேர்முகம்: நேர்காணல் பாரதி கார்த்திக்

  • கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

கூட்டமைப்பில் சிக்கல்களும் விரிசல்களும் ஏற்பட வாய்ப்புண்டு! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 2

  • புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

புலம்பெயர் சமூகம் தனியாக அரசியலை மேற்கொள்வது அர்த்தமற்றது! - சுரேஷ் பிரேமச்சந்திரன் நேர்காணல் - பகுதி 1

»மேலும்

நிழல்
ஜெனிவா தீர்மானம் குறித்த எதிர்பார்ப்புகள் இறுதியில் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாடு (25.02.13)

»மேலும்

புதினங்கள்
செய்திகள்
முகநூல்