தமிழ்ச்செல்வன்
நாம் வாழ்நாளில் எத்தனையோ திரைப்படங்களை பார்க்க நேரிடும். சில படங்கள் வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமாக இருக்கும். சில படங்கள் நம்முள் ஒருவித உணர்வை நம்மை அறியாமலேயே ஏற்படுத்திவிடும். சில படங்கள் நமது வாழ்க்கையை திசை மாற்றிவிடும். சில படங்கள் நமக்கான செய்தியை சொல்லிவிட்டு செல்லும்.
ஆம், திரைப்படம் ஒரு வலிமையான மக்கள் ஊடகம்தான். நாம் நம்மை எதனை நோக்கி செலுத்தி வந்தோமோ அவ்வழித்தடத்தை ஒட்டிய காட்சிகள் நம் கண்முன் விரியும்பொழுது பெரும்தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்திவிடுகிறது. அப்படி என்னுள் தாக்கத்தை செலுத்திய படம் தான் 'பாபாசாகேப் அம்பேத்கார்'.
பொதுவாக, வரலாற்று பாத்திரங்களை வைத்து திரைக்கதைகளை எழுதுபவர்கள் நிகழ்கால சமூகத்திற்கு புரியும் வகையில் அத்திரைக்கதையை கொண்டு சேர்த்து விடுவதில்லை. உண்மை சம்பவங்களை சொல்ல வேண்டிய நிர்ப்பந்தத்திலும் சுவையாக திரைக்கதை அமைக்கவேண்டிய கட்டாயத்திலும் சிக்குண்டு மக்களிடம் செய்தியினை கொண்டு சேர்க்கத் தவறிவிடுகின்றனர். அல்லது, காலகட்டத்திற்கு ஏற்ப மக்களுக்கு சொல்லவேண்டிய நெறிமுறைகளை கையாளாமல் மக்களிடம் இருந்து திரைப்படத்தை அந்நியப்படுத்தி விடுகின்றனர்.
ஆனால், திரைக்கதையை சுவையாக்கும் 'நவீன' நெறிகளையெல்லாம் கையாளாமல், வரலாற்று நிகழ்வுகளின் உண்மைத்தன்மையில் எவ்வித குறைப்பாடும் தெரியா வண்ணம் அம்பேத்கார் படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்றே சொல்லலாம்.
அம்பேத்காரின் ஆளுமையை தனது நடிப்பின் ஆளுமையால் சிதைத்துவிடாமல், மிகைப்படுத்தாமல் அம்பேத்காராகவே வாழ்ந்திருந்தார் நடிகர் மம்மூட்டி என்றே சொல்லவேண்டும்.
வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் சாதிய கொடுமைகளுக்கு உள்ளாகும்பொழுதும் அதனை சாந்தமாக எதிர்கொள்கிறார். வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் நிறவெறி கிண்டலுக்கு ஆளாகிறார், அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் பெரிய படிப்புகள் படித்துவிட்டு உயரதிகாரியாக இந்தியாவில் பணிபுரியும் வேளையிலும் கடைநிலை, இடைநிலை ஊழியர்களால் பாரபட்சமின்றி சாதியின் பெயரால் அவமானப்படுத்தப்படுகிறார். ஒவ்வொன்றையும் மென்மையாக எதிர்கொள்கிறார். ஒவ்வொரு இடத்திலும் அவமானப்படும்பொழுதும் அதனை நிதானமாக எதிர்கொண்டாலும் இக்கொடுமைகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து அடிமைப்பட்டு கிடக்கும் மக்களை விடுவிக்க வேண்டும் என்ற அவரது சிந்தனை ஓட்டத்தை நடிப்பின் மூலம் வெளிப்படுத்துகிறார் மம்மூட்டி.
கல்லூரி பேராசிரியராய் பொறுப்பேற்ற பிறகும் மாணவர்களாலும் சக ஆசிரியர்களாலும் ஒதுக்கப்படுகிறார். அங்கிருந்து ஆவேசத்தையும் போராட்டத்தையும் வெளிப்படையாக வெளிப்படுத்துவது, பிரசங்கம் செய்வது, மக்களுடன் போராடுவது, மக்கள் தலைவனாய் மாறுவது, மக்களுக்கான இயக்கத்தை கட்டியமைப்பது என தனிமனிதனாய் இருந்த அம்பேத்கார் முதல் மாபெரும் புரட்சி இயக்கமாய் மாறும் அம்பேத்கார் வரை நடக்கும் பரிமாண மாற்றத்தை அம்பேத்காரின் ஆளுமையின் தரம் உணர்ந்து வெளிப்படுத்தியிருந்தார் மம்மூட்டி.
எப்படி அம்பேத்காரை பற்றி சொல்லும்பொழுது பெரியாரை பற்றி சொல்லாமல் இருக்க முடியாதோ அதேபோலத்தான் அம்பேத்கார் திரைப்படத்தை பற்றி சொல்லும்பொழுதும் பெரியாரின் திரைப்படத்தைப் பற்றி சொல்லாமல் இருக்கமுடியவில்லை.
பெரியார் படத்தில் முதல் பாதி முழுவதும் சத்தியராஜ் என்ற நடிகரும் பின்பாதியில்தான் பெரியாரும் தெரிவார்கள். ஆனால் அம்பேத்கார் திரைப்படத்தில் தொடக்கம் முதலே அம்பேத்கார்தான் தெரிந்தார்.
திரைப்படம் நடிப்பு என்பதற்கு அப்பாற்பட்டு பல இடங்களில் நான் அம்பேத்காருடன் வாழ்ந்து வருவதாக உணர்ந்தேன். எனக்கு நெருக்கமாக இருந்து எனக்கு அரசியல் சொல்லிக்கொடுப்பது போல உணர்ந்தேன். அவ்வுணர்தலுக்கு காரணம் அம்பேத்கார் என்ற மனிதரின் ஆளுமைதான்.
புத்தகங்கள் படிக்கும்பொழுது நம் மனக்கண்முன் காட்சிகள் விரிந்தாடுமே? அவ்வண்ணமே அம்பேத்கார் திரைப்படம் பார்க்கும்பொழுதும் நிகழ்கால சமூக சூழலும் மனதில் அசைந்துகொண்டே இருந்தது. திரைப்படமும் அம்பேத்காரும் ஆழப் பதிந்ததற்கான காரணத்தையும் தாக்கத்தையும் மனமாற்றத்தையும் ஏற்படுத்தியதற்கான காரணத்தையும் அலசினேன்.
ஒருவேளை அத்திரைப்படம் நடந்த காலக்கட்டத்தில் நடந்தேறிய சமூக அவலங்கள் நான் வாழும் இன்றைய காலகட்டத்தில் இல்லாமல் போயிருந்தால் கூட எனக்குள் இத்திரைப்படம் இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்காது எனத் தோன்றியது. ஆனால், எனது மக்கள் இன்னும் அடிமைப்பட்டுத்தான் கிடக்கிறார்களே என நினைத்து மனதளவில் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும்பொழுது என் கண்முன் அவ் அவலங்களிற்கு எதிராக போராடிய ஒரு தலைவனின் சரித்திரம் வந்து நிழலாடிவிட்டு செல்லும்பொழுது அந்நிழல் என்னை கேள்வி கேட்டதாகவே பட்டது.
இதற்கு முன்னர் எனது வாழ்வில் அம்பேத்கார் எங்கெல்லாம் இருந்தார் என நினைத்து பார்த்தேன். பெரியார் என்ற மனிதரை படித்ததாலும் பிடித்ததாலும்தான் எனக்கு அம்பேத்கார் சிறுவயதில் இருந்தே அறிமுகமாயிருந்தார். ஆனால், இத்திரைப்படம்தான் என்னை அவருடன் மிக நெருக்கமாக்கிவிட்டது எனலாம்.
தமிழகத்தில் தமிழ்த்தேசியமும் பெரியாரியமும் பேசுபவர்கள் மத்தியில்கூட அம்பேத்கார் பற்றின பேச்சு குறைவானதாக இருக்கிறது என்ற குறைபாடும் தமிழகத்தில் உண்டு. அது உண்மைதான். பெரியாரியத்தால் ஈர்க்கப்பட்டும் அதனாலேயே எனது வாழ்வு அரசியலை நோக்கித்தான் என முடிவெடுத்த நான் கூட அம்பேத்காரிடம் இதுவரைகாலமும் நெருங்காமல் இருந்திருக்கிறேன் என்பது எனக்கு அரசியல் கற்றுக்கொடுத்தவர்கள் தவறுதானே.
வட இந்திய தலைவர்களை பற்றியெல்லாம் வரலாற்றுப் பாடத்திட்டத்திலும் இன்னபிற பொது அறிவு பாடத்திட்டத்திலும் என்னைப் பக்கம் பக்கமாக படிக்கவைத்த கல்வித்திட்டம் கூட அம்பேத்காரைப் பற்றி 'ஒரு மதிப்பெண்' கேள்விபதில் அளவிற்குத்தான் எனக்கு அறிவூட்டியிருந்தது. பூர்வக்குடி மக்களின் உரிமைக்காக பாடுபட்ட அம்பேத்காரை வெறும் சட்டவியல் நிபுணராக இந்திய அரசியல் சாசனத்தை எழுதிய குழுவில் ஒரு நபராக மட்டும்தான் இந்திய அதிகார வர்க்கம் இந்தியர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. அவரது ஆளுமைகள், அவரது அவமானங்கள், அவரது வாழ்க்கையில் சந்தித்த போராட்டங்கள் என அனைத்தையும் மறைப்பதின் மூலம் அதிகார வர்க்கமும் பார்ப்பன கூட்டமும் தனது சுயத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது என்றே சொல்லலாம்.
எனது முதுநிலை அறிவியல் தேர்ச்சிக்கு பிறகு கருநாடக மாநிலம் பெங்களூரில் வேலை செய்துகொண்டிருந்தேன். எனது அறையில் எனது நிறுவனத்தில் என்னுடன் பணிபுரியும் நான்கு கருநாடக இளைஞர்கள் தங்கியிருந்தனர். அதில் மூவர் பார்ப்பனர்கள். எனது அறையில் எப்பொழுதும் பெரியாரின் படமும் தலைவர் பிரபாகரனின் படமும் ஒட்டப்பட்டிருக்கும். அப்படங்களில் இருப்பவர்கள் பற்றி அம்மூன்று பார்ப்பனர்களுக்கும் தெரிந்திருக்கவில்லை. பெயர் சொன்ன பிறகும் அவர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை.
நான்காவது நபரிடம் கேட்டபொழுது, 'இவரது பெயர் தந்தை பெரியார்' என்றார். எனது ஆச்சரியம் விலகாமல் அடுத்தவர் பற்றி கேட்டேன். அவருக்கு தெரியவில்லை. ஆனால், பெயர் சொன்னவுடன் அவரைப் பற்றி தனக்கு கொஞ்சம் தெரியும் என சொன்னார்.
தந்தை பெரியாரை மிகவும் மதிப்பதாக சொன்னீர்களே, எப்படி உங்களுக்கு மதிப்பு உண்டானது என்றேன். அம்பேத்கார் என்ற மனிதர் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நானும் எனது குடும்பத்தாரும் இன்றும் தீண்டத்தகாதவர்களாகத்தானே இருந்திருப்போம். அவரை போலவே எம் மக்களின் உரிமைக்காக போராடியவராயிற்றே உங்கள் பெரியார். அவரை எப்படி எனக்கு தெரியாமல் இருக்கும் என்றார். பிற மூவருக்கும் பெரியாரை பற்றி தெரியாமல் இருந்ததற்கான காரணமும் இவருக்கு மட்டும் பெரியாரை பற்றி தெரிந்திருந்ததற்கான காரணமும் நன்றாக விளங்கியது.
ஆனால், பெரியாரும் அம்பேத்காரும் அவர்களது கனவில் முழுமையாக வென்றுவிட்டார்களா என சிந்தித்துப் பார்த்தேன். நிச்சயமாக இல்லை என்றே தோன்றியது. சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று பொருளாதார முன்னேற்றம் கிடைத்துள்ளதே தவிர (அதுவும் குறைந்த சதவீத மக்களுக்குத்தான்) சமூக மாற்றம் முழுமையாக நடந்துவிடவில்லை என்பதும் உண்மைதான். தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் கூட இன்றும் வெளிப்படையான சாதிய வன்கொடுமைகள் தொடர்ந்துகொண்டுதானே இருக்கிறது.
அம்பேத்காருக்கும் பெரியாருக்கும் எத்தனையோ ஒற்றுமைகள் இருப்பினும் மிகப்பெரிய வேற்றுமையும் இருக்கிறது. அம்பேத்கார் 'இந்து' மதத்தின் மூலமும் 'இந்துத்துவ' சக்திகளிடமும் இருந்து முழுமையாக வெளியேறுவதன் மூலம், வேறு மதத்தை பின்பற்றுவதன் மூலம் தனது மக்களுக்கு சமூக அவலங்களில் இருந்து விடுதலை கிடைக்கும் என நம்பினார். தான் இறக்கும் தறுவாயில் தன்னையும் தன் மக்களையும் அடிமைப்படுத்தும் மதத்தின் பிள்ளையாய் இருக்கக்கூடாது என நினைத்தார்.
பெரியார், மக்களை பகுத்தறிந்து வாழ வைக்க ஆசைப்பாட்டாரே தவிர ஒரு மதத்தில் இருந்து இன்னொரு மதத்திற்கு மாறுவதை அவர் விரும்பவில்லை. மத வழிபாடையோ அல்லது இன்னபிற சித்தாந்த பின்பற்றுதலோ இருக்கக்கூடாது எனவும் ஒவ்வொரு மனிதனும் சுயமாக சுயமரியாதையோடு வாழவேண்டும் எனவும் அவர் விரும்பினார்.
இரு பாதைகளையும் இவ்விரு தலைவர்களும் தாம் வாழ்ந்த சூழல் சார்ந்து, தங்களது மக்களின் நலன் சார்ந்து எடுத்திருக்கிறார்கள். யார் எடுத்த முடிவு சரி, யாருடையது வெற்றியீட்டியது என்றெல்லாம் ஒப்பிட முடியாது என நினைக்கிறேன். எப்படியாயினும், அவர்கள் இருவரும் நினைத்த சமூக மாற்றம் இன்னும் முழுமையாக நிகழ்ந்துவிடவில்லை என்பது மட்டும் உண்மை.
இன்றைய வரையில் அம்பேத்கார் உருவாக்கிய தளத்தில் மட்டும்தான் நின்று கொண்டிருக்கிறோமே தவிர, அதனைத் தாண்டிய சமூகச் சிந்தனையையோ காலத்திற்கேற்ற மாற்றத்தையோ நாம் பெற்றுவிட்டோமா என்றால் இல்லை என்றே சொல்லலாம். அம்பேத்காரை முன்னிறுத்தி அரசியல் செய்பவர்கள் அவரை நன்கு அறிந்துவைத்திருக்கிறார்கள். அவரை சமூக அரசியல் தளங்களில் முன்னிறுத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் இருக்கிறார்கள். ஆனால் சமூகத்தை கொள்கை சார்ந்து அணி திரட்ட தவறுகிறார்கள். மக்களுக்கு அறிவூட்டுவது என்பது வேறு. அரசியலை ஊட்டுவது என்பது வேறு. நாம் மேடைகளிலும் எழுத்துகளிலும் மக்களுக்கு அறிவை ஊட்டுவதில் மட்டும்தான் வல்லவர்களாக இருக்கிறோம் என்று நினைக்கிறேன். இதனை குறிப்பாக சொல்வதற்கு காரணம், அரசியல் தளங்களில் இருப்பவர்களிடமும் செயல்படுபவர்களிடமும் தாங்கள் சார்ந்த அரசியலில் மிகுந்த தெளிவும் அறிவும் காணப்படுகிறது. ஆனால், சமுதாய போராட்டங்களில் உத்வேகமும் செயற்பாடும் குறைந்த காணப்படுகிறது.
அடுத்து சமகால அரசியலை சிந்திக்கும்பொழுது, கொள்கை சார்ந்த அரசியலையும் தேர்தல் சார்ந்த அரசியலையும் ஒரு சேர இழுத்து செல்வதுதான் நமக்கு இருக்கும் மிகப் பெரிய சவாலும் பிரச்சனையும். ஒவ்வொரு கொள்கைவாதியும் தோற்பது அல்லது வழித்தடம் மாறுவதும் தேர்தல் அரசியலில் எடுக்கும் முடிவுகளில்தான். அம்பேத்காரை முன்னிறுத்தி அரசியல் செய்யும் மாயாவதி கூட ஆட்சிக்கட்டிலில் ஏற பார்ப்பனர்களை ஏற்க வேண்டிய நிலை உருவாகிறது.
இறுதியாக, அம்பேத்கார் திரைப்படத்தில் வரும் வசனம்தான் எனக்கு நினைவிற்கு வருகிறது. 'மகாத்மாக்கள் வருவார்கள் போவார்கள், ஆனால், தீண்டாமை ஒரு போதும் அழிவதில்லையே' என வருத்தப்பட்டு அம்பேத்கார் சொல்வது போல வசனம் வரும். அம்பேத்கார்களும் பெரியார்களும் வருகிறார்கள் செல்கிறார்கள். பார்ப்பன ஆதிக்கம் மட்டும் நிலைத்து நிற்கிறதே! எதனால்? பெரியாருக்கும் அம்பேத்காருக்கும் பிறகு அவர்களை பின்பற்றும் தொண்டர்கள் வருகிறார்கள். ஆனால், பெரியாரை போன்றும் அம்பேத்காரை போன்றும் தலைவர்களாக மாறுவதில்லை.