நிர்மானுசன் பாலசுந்தரம்
கறுப்பு யூலையின் நெருப்பு நினைவுகள் நெஞ்சை பிளக்கின்ற தருணம், சோகம் மட்டுமல்ல, நாம் மீளவும் எழ வேண்டும் என்ற எண்ணமும் கூடவே வருகிறது. அந்த அடிப்படையில், இருபத்தொன்பது வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற யூலை 1983 இனஅழிப்பினதும், மூன்று வருடங்களுக்கு முன்னர் மே 2009 ல் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற மூர்க்கத்தனமான இனஅழிப்பினையும் முன்வைத்து, தமிழ்த் தேசியப் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வுக்கான முன்னெடுப்புகள் தொடர்பாக ஆராய முற்படுகிறது இந்தக் கட்டுரை.
வெளியகத் தலையீடுகள் (External Interventions)
'ஒரு பக்கம் ஆயுதங்கள் உறுமத் தொடங்க, மறுபுறம் அவலங்கள் அரங்கேற, சமநேரத்தில் பிராந்திய வல்லாதிக்க சக்தியான இந்தியா முதலாவது சர்வதேச (வெளியக) தலையீட்டை 1983ல் தொடக்கி வைத்தது. சுமார் இருபத்தாறு வருடங்கள் கழித்து (2009), ஆயுதங்கள் மௌனமாக, சாவுகளும், அழிவுகளும் எண்ணிப் பார்க்க முடியாத தொகையைத் தொட மேற்குலகின் தலையீடு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வலுப்பெற்றது. யூலை 1983 உடன் பிராந்திய மயமடைந்த தமிழர்களின் உரிமைக்கான போராட்டம், மே 2009 உடன் சர்வதேச உறவுகளில் (International Relations) தட்டிகழிக்கவோ, தவிர்க்கவோ முடியாத விடயமாக மாற்றுநிலையாக்கம் அடைந்துள்ளது.'
இரண்டு தலையீடுகளுமே, குறித்த சக்திகளின் தேசியநலன்களை மையப்படுத்தியே நகர்ந்தது, நகர்கிறதாயினும், அதே நிகழ்வுகளின் அடிப்படையில், தமிழர்களுடைய தேசிய நலனையும் பூர்த்திசெய்யக்கூடிய சந்தர்ப்பம் தமிழர்களுக்கு இருந்தது, இருந்து வருகிறது.
ஆனால், அதனை பொருத்தமான முறையில் பயன்படுத்துவதற்கான திட்டமிடல், ஒருங்கமைப்பு, நிர்வாகம் மற்றும் அமுலாக்கம் போன்ற விடயப் பரப்புகளில் உள்ள தமிழர்களின் பலவீனமான நிலை, தமிழர்கள் தமது தேசிய நலனை அடைவதில் முட்டுக்கட்டையாக உருவெடுத்துள்ளது.
தமிழர்களுக்கு முன்னுள்ள சவால்கள்
தமிழர்களின் மறுமலர்ச்சிக்கு (Tamil Renaissance) வெளியக சவால்களுக்கு நிகராக உள்ளகச் சவால்கள் நிறைந்துள்ளமை இலக்கினை அடைவதற்கான பெரும் தடைக்கல்லாகும். உள்ளகச் சவால்கள் வெற்றிகொள்ளப்படுமிடத்தே, வெளியக சவால்களுக்கு சரியான முறையில் முகம்கொடுத்து, அவற்றை வெற்றிகொள்ள முடியும். ஆகவே, அத்தகைய விடயத்தினை கவனத்திற்கொண்டு, காலத்திற்கும், களத்திற்கும் ஏற்ற அணுகுமுறைகள் கையாளப்பட வேண்டும்.
தமிழர்களின் அறவழிப் போராட்டம், ஆயுதப் போராட்டம் ஆரம்பமான சூழல்களிலிருந்து மாறுபட்டதாகவே இன்றைய பூகோள ஒழுங்கு திகழ்கிறது. ஆகவே, இலக்கினை அடைவதற்காக உத்திகளில் (Tactics) மாற்றம் தேவைப்படுகிறது. உத்திகள் மாற்றமடையக்கூடியவை. உபாயங்கள் (Strategies) மாறாத்தன்மையுடையவை. இன்னொரு வகையில் கூறுவதானால், உபாயங்களின் வெற்றிக்காக உத்திகள் மாற்றமடையும். உத்திகளும், உபாயங்களும் ஆக்கபூர்வமாக ஒன்றிணைவதனூடாகவே இலக்கினை அடைய முடியும். இலக்கில் தெளிவாகவும், உறுதியாகவும் இருந்தால் உத்திகளை மாற்றியமைப்பதால் பாதகங்கள் உண்டாகாது. ஆனால், உத்திகளையோ, உபாயங்களையோ இலக்காக மாற்றினால், எல்லோரும் குழம்புவது மட்டுமல்ல, அனைத்துமே அழித்து விடும். ஆகவே, உத்திகள், உபாயங்கள் மற்றும் இலக்கு தெளிவாக வரையறை செய்யப்பட்டு, திட்டமிடலும், அமுலாக்கலும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
வேற்றுமையில் ஒற்றுமை (Unity in Diversity)
மே 2009 க்கு பிந்திய தமிழ்த் தேசிய அரசியல் சூழல் என்பது, தெளிவற்ற நிலமைகளை உருவாக்கியதால், தமிழர்களின் ஒரு துருவ (Unipolar) அரசியல், பல்துருவ (Multipolar) அரசியலுக்கு மாற்றுநிலையாக்கம் அடைந்தது. துரதிஸ்டவசமாக, இது இலக்கினை அடைவதற்கான செயல்திட்டங்களில் போட்டிகளை உருவாக்கியதை விட, தனிநபர்களுக்கு அல்லது அமைப்புக்களுக்கு இடையிலான போட்டியை தீவிரப்படுத்தியது. இதனால், பிரதான இலக்கை நோக்கிய பயணத்தில் தாமதத்தை ஏற்படுத்தி வருவதுடன், முதன்மையான எதிராளியின் செயற்பாடுகள் மீதான கவனத்தையும் சீர்குலைய வைத்தது. ஆதலால், தமிழர்களின், சிந்தனா சக்தி என்பது, தமிழர்களின் பக்கம் சிந்தித்து மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சிக்கு துணைநின்றதை விட, அவர்களுக்குகிடையில் உருவான போட்டியை சமாளிப்பதற்கே செலவிடப்பட வேண்டியதாயிற்று.
இந்தநிலை காரணமாக, ஒரு செயல்திட்டத்தையே பல்வேறு தரப்புகளும் நகல்செய்யும் ஆக்கபூர்வமற்ற செயல் ஆழவேரூன்றத் தொடங்கியது. இதனால், செய்யப்படவேண்டிய பல பணிகள் புறந்தள்ளப்பட்டுள்ளன. சில பணிகள், உண்டான சூழலால் தற்போது கவனத்தை ஈர்க்கத் தொடங்கியுள்ளன. ஆனால், எந்தளவுக்கு இந்த விடயங்கள் ஆரோக்கியமான திசையை நோக்கி நகரும் என்பதற்கான சான்றுகள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. தமிழ் அரசியல் - போர்க் கைதிகள் விடுதலை மற்றும் சிறிலங்கா அரசின் தமிழர் தாயகத்தின் நிலங்களை ஆக்கிரமிப்பதற்கெதிரான போராட்டங்கள் வரவேற்கத்தக்கவை. ஆனால், இவற்றின் வெற்றியென்பது, எதிர்கால சிறப்பான முன்னெடுப்புகளிலேயே தங்கியுள்ளது. இவை தொடர்பான பூரண விபரங்கள் திரட்டப்படுவதோடு, இவற்றுக்கு நிகரான சர்வதேச படிப்பினைகள் தொடர்பான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவையுள்ளது.
இவ்வாறான வேலைத்திட்டங்களை பிரிந்துள்ள தரப்புகளில் ஒரு தரப்பு பொறுப்பெடுத்து கொள்ளலாம். அல்லது, பொருத்தமான சந்தர்ப்பங்களில் தகவல் பகிர்வுகளையோ அல்லது பரிமாற்றங்களையோ செய்யலாம். தமிழர் தாயகத்தில், தனிமனித சுதந்திரம், சிவில் மற்றும் அரசியல் சுதந்திரங்கள் மறுக்கப்பட்டு, அங்குள்ள உறவுகள் அடக்குமுறைக்கு மத்தியில் திறந்த வெளிச் சிறைச்சாலைக்குள் வாழ்வதால், மேற்கூறியது போன்ற வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான பின்னணிப் பணிகளை புலம்பெயர் தமிழ்மக்கள் வழங்குவது நன்றாக இருக்கும்.
குறைபாடுகளும், வேறுபாடுகளும் இல்லாத ஒரு சமூகம் இந்த உலகின் எந்த ஒரு மூலையிலும் இல்லை. ஆனால், புரிந்துணர்வுடனும், ஒத்துழைப்புடனும் விடயங்களை நகர்த்தினால், இலக்கினை அடையலாம் என்பதை முரண்பாடுகளால் கூர்மையடைந்த இனக்குழுமங்கள் - அமைப்புக்களே நிரூபித்துள்ளன.
ஐந்து விரல்களுக்கிடையில் உயரத்தில் வேறுபாடிருப்பதால், உள்ளங்கையுடன் இணையாவிட்டால், கையுக்கு மட்டுமல்ல, அது முழு உடலுக்குமே தாக்கத்தை கொடுக்கும். ஆகவே, போட்டிகள் இருப்பின் அவை செயல்திடங்களுக்கு இடையிலான போட்டியாக இருக்கலாம். ஆனால், தனிநபர்களுக்கோ அல்லது அமைப்புகளுக்கோ இடையிலான போட்டியாக இருப்பது போராட்ட முன்னெடுப்புக்கு ஆரோக்கியமானதாக அமையாது. ஆதலால், வேறுபாடுகள் இருப்பினும் இலக்கினை கருத்தில்கொண்டு செயல்திடங்களுக்கு இடையில் இணைப்பினை ஏற்படுத்தி முன்னகர்வதே தமிழர் உரிமைப் மீட்புப் போராட்டத்தை காத்திரமான பாதைக்கு இட்டுச்செல்லும்.
புரிந்துணர்வும் முன்னெடுப்பும்
முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நினைவுகூரும் போது, ஒரு தரப்பு எழுச்சி நாளாகவும், இன்னொரு தரப்பு துக்கநாளாகவும் அனுஸ்டிக்கிறது. அதேவேளை, இதனை ஒரு தரப்பு போர்க்குற்ற நாள் என்கிறது, இன்னொரு தரப்பு இனப்படுகொலை-இன அழிப்பு நாள் என்கிறது. ஒரு விடயத்தை வெவ்வேறு தரப்புக்கள் பல்வேறு விதமாக சொல்வது சரியான செயல்பாடு அல்ல. அத்துடன், மக்களை குழப்பத்துக்கு உள்ளாக்குவதோடு, தமிழர் தரப்பு தமக்கு ஏற்பட்ட அவலத்தை சரியாக வரையறை செய்யவில்லை என்ற எண்ணம் உருவாக வழியமைக்கும்.
போர்க்குற்றஙகள் (War crimes), மானுடகுலத்துக்கு எதிரான குற்றங்கள் (Crimes Against Humanity) மற்றும் இனச்சுத்திகரிப்பு (Ethnic Cleansing) என்பன இன அழிப்புக்குள் உள்ளடங்குகின்றன. இனப்படுகொலை என்ற சொற்பதத்தை பிரயோகிப்பதிலும் பார்க்க, இன அழிப்பு (Genocide) என்ற சொற்பதத்தை பிரயோகிப்பது நன்று. ஏனெனில், இனஅழிப்பு என்பது மூன்று வகைப்படும். அவையாவன, நேரடி இனஅழிப்பு (Direct Genocide), கட்டமைப்புசார் இனஅழிப்பு (Structural Genocide) மற்றும் பண்பாட்டுரீதியான இனஅழிப்பு (Cultural Genocide). நேரடி இனஅழிப்பால் குறித்த மக்கள் கூட்டம் ஆயுதங்களால் படுகொலை செய்யப்படுவார்கள். உதாரணமாக, முள்ளிவாய்க்காலில், இலகுரக மற்றும் கனரக ஆயுதங்கள் மூலம் மக்கள் படுகொலை செய்யப்பட்டமையை நேரடி இனஅழிப்பு எனலாம். அதே சம்பவத்தில், போதிய மருத்துவ வசதியை மறுத்ததனூடாக அல்லது போதிய உணவு இன்றி மக்கள் மரணமடைந்ததை கட்டமைப்புசார் இனஅழிப்பு எனலாம். பரிச்சயமான முறையில் கூறுவதானால், உணவும், மருந்தும் ஆயுதமாக பாவிக்கப்பட்டதால், ஆயிரக்கணக்கான மக்கள் மரணமடைந்தனர். இதனை கட்டமைப்புசார் இனஅழிப்பு எனலாம். யாழ் பொதுநூலகம் எரிப்பு போன்ற சம்பவங்களை பண்பாட்டு இனஅழிப்பு எனலாம். பொதுநூலகம் எரிப்பு விடயத்தை படுகொலை என வரையறை செய்யமுடியாது. அழிப்பு எனக் கூறுவதே பொருத்தமாகும். தமிழ் மக்கள் மீதான இத்தகைய தாக்குதல்களை சிறிலங்கா ஆட்சிபீடம் திட்டமிட்ட முறையில் வேண்டுமென்றே நடாத்தியுள்ளது என நிரூபிப்பதனூடாகவே தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்டது இனஅழிப்பு என்பதை உலகை ஏற்றுக்கொள்ளச் செய்யமுடியும்.
மதிப்பீடுகளும் சந்தர்ப்பங்களும்
சுமார் ஐந்து தசாப்தகால இனக்குழும மோதுகையால், அண்ணளவாக நான்கு இலட்சத்து ஐம்பதாயிரம் (4 50 000) தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இவற்றுள், யூலை 83 இன அழிப்பு நடவடிக்கை, செம்மணி படுகொலை, திருகோணமலையில் ஐந்து மாணவர்களும், 17 தொண்டுநிறுவன பணியாளர்களும் படுகொலைசெய்யப்பட்டமை மற்றும் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நடவடிக்கைகள் போன்ற குறைந்தளவான சம்பவங்களே சர்வதேச ரீதியாக கவனத்தையீர்த்தன. கொக்கட்டிச்சோலைப் படுகொலை, வந்தாறுமுலைப் படுகொலை, வல்வை நூலகப் படுகொலை மற்றும் யாழ் போதனா வைத்தியசாலைப் படுகொலை போன்ற படுகொலைகள் ஏன் சர்வதேசரீதியாக பேசப்படவில்லையென்பது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, இனஅழிப்பின் அங்கமான சகல படுகொலை நடவடிக்கைகளும் சர்வதேசரீதியாக வெளிக்கொணரப்பட வேண்டும்.
வடகிழக்கு மனித உரிமைகள் செயலகத்தால் 1956 தொடக்கம் யூன் 2008 வரையான படுகொலைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், அதற்கு பிற்பாடு இடம்பெற்ற படுகொலைகளும் சரிவர ஆவணப்படுத்தப்பட்டு சர்வதேசத்தின் மனச்சாட்சிக் கதவுகள் திறக்கப்படும் வரை பல்வேறு தளங்களில் அழுத்தங்களை மேற்கொள்ள வேண்டும். அத்துடன், பண்பாட்டுரீதியான இனஅழிப்பு நடவடிக்கைகளும் உரியமுறையில் ஆவணப்படுத்தப்பட வேண்டும். அத்துடன், இனஅழிப்பு என்பதை நிரூபிக்க ஒளிப்படங்கள் மட்டும் போதாது. எந்த இடத்தில் நடந்தது, இதில் படுகொலை செய்யப்பட்டவர்கள் யார் மற்றும் படுகொலைக்கு பொறுப்பான அதிகாரி அல்லது படைப்பிரிவு எது போன்ற பின்னணித் தகவல்களும் அவசியமாகும். இதுபோன்ற பின்னணித் தகவல்களை சேகரிப்பது கடினம் என்றாலும், இவற்றை சேகரித்தாலே இனஅழிப்பு என்பதை நிரூப்பிப்பதற்கான சாத்தியப்பாடுகள் அதிகரிக்கும்.
பூகோள அரசியலின் இன்றைய போக்கு, தமிழர்களுக்கு இடம்பெற்றதை போர்க்குற்றம் மற்றும் மானுட குலத்திற்கு எதிரான குற்றம் என்று வரையறைப்படுத்த முயன்றாலும், தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வருவது இனஅழிப்புத்தான் என்பதை நிரூபிக்கும் முயற்சியில் தமிழர் தரப்பு விடாமுயற்சியுடன், தொடர்ச்சியாகவும், துடிப்புடனும் செயற்படவேண்டும். அத்தகைய செயற்பாட்டினூடாகவே, காலப்போக்கில் தமிழர்கள் மீது நடாத்தப்பட்டது இனஅழிப்புத்தான் என்பதை நிரூபிக்கமுடியும்.
செயல்திட்ட ஓருங்கிணைப்பும், பகிர்வும்
மேற்கூறிய விடயங்களை கவனத்திற்கொண்டு, அணிகளும், பொறுப்புகளும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அனைத்து வேலைத்திட்டங்களையும் ஒரு அமைப்பே பொறுப்பெடுக்காமல், வெவ்வேறு அமைப்புகளுக்கு அல்லது அணிகளுக்கு பகிர்ந்தளிப்பு செய்வதனூடாக அவரவருக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை, வினைத்திறனுடனும், விரைவாகவும் முன்னெடுக்கலாம்.
பின்வரும் விடயங்களுக்கு முன்னுரிமை கொடுப்பது நன்று
1. தாயகத்திலுள்ள மக்களின் அடிப்படை மனித தேவைகளையும், மனிதாபிமான தேவைகளையும் கேட்டறிந்து, அவற்றை பூர்த்தி செய்வதற்கான செயல்திட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும். இத்தகைய உதவிகள், படுவான்கரை, கரடியனாறு, கட்டைப்பறிச்சான், திரியாய், பொத்துவில் ஊடாக வன்னி, யாழ்ப்பாணம் என தேவையறிந்து வேர்விட்டு துளிர்க்க வேண்டும். சமூகக் கட்டமைப்பு பலமாக உள்ள மக்களாலேயே தேசக் கட்டமைப்பினை உருவாக்கலாம் என்பதை மனதிற்கொள்க.
2. அரசியல் மற்றும் போர்க் கைதிகள் விடுதலைக்கு வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, சிறிலங்காப் படையினரால் இயக்கப்படும் இரகசிய தடுப்பு முகாம்கள் மற்றும் சித்திரவதைக்கூடங்கள் தொடர்பான விபரங்களையும் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் சபை உள்ளிட்ட சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் நாடுகளின் வெளிவிவகார திணைக்களங்களுக்கும், சர்வதேச ஊடகங்களோடும் பகிர வேண்டும்.
3. முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற போர்க்குற்றம் மற்றும் மானுட குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சர்வதேசரீதியான சுதந்திரமான விசாரணை உருவாக வழிசமைக்கின்ற அதேவேளை, ஒட்டுமொத்த்தில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டது இனஅழிப்புத்தான் என்பதை நிரூபிப்பதற்கான செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
4. தமிழர் தாயகத்தில் தொடர்ச்சியாகவும், தீவிரமாகவும் இடம்பெற்று வருகின்ற இராணுவ மயமாக்கல் மற்றும் சிங்கள மயமாக்கல் ஊடான நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை சர்வதேச சமூகத்தின் கவனத்துக்கு விரைவாகக் கொண்டுவரவேண்டும்.
5. பொருளாதார மேம்பாடு: தமிழர்களின் இன்றைய பொருளாதார பிரச்சனைகளை சரியான முறையில் கையாளாவிட்டால், தமிழ் மக்களும், தமிழர் தேசமும் வரலாற்றில் என்றுமே சந்தித்திராத சவால்களை சந்திக்க வேண்டிவரும். அந்த அடிப்படையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான மனிதாபிமான உதவிகள் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் சென்றடைவதற்கான பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும்.
6. ஏலவே எனது முன்னைய கட்டுரைகள் மற்றும் நேர்காணல்கள் ஊடாக வெளிப்படுத்திய விடயமானாலும், ராஜதந்திர முன்னெடுப்புகளுக்கான ஆக்கத்திறன் மிக்க சர்வதேச உறவுகளுக்காக ராஜதந்திர செயலகம் ஒன்று விரைவாக உருவாக்கப்பட வேண்டும்.
7. இலங்கைத் தீவெங்கும் பரவலாக இடம்பெறுகின்ற மனித உரிமை மீறல்கள், ஊடகங்களுக்கு எதிரான ஜனநாயக எதிர்ப்பு விடயங்களை வெளிக்கொணர வேண்டும்.
8. அரசியல் சுதந்திரம் மறுக்கப்படுகின்றமை, அடிப்படை உரிமை மீறல்கள் போன்ற சம்பவங்கள் உடனுக்குடன் வெளியுலகுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும்.
9. தமிழ் மக்களிடத்தில் முள்ளிவாய்க்காலோடு உண்டான, தற்போது திட்டமிட்டு விதைக்கப்பட்டு வருகிற தோல்வி மனப்பான்மை நிலையை மாற்றுவதற்கான உலகளாவிய ரீதியிலான உளவளதுணை செயற்பாடுகள் விரைவாகவும், தீவிரமாகவும் முன்னெடுக்கப்பட வேண்டும்.
10. இனஅழிப்பை எதிர்கொண்டுள்ள இனம் என்று மட்டுமல்ல வரலாற்று ரீதியாகவே, சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தம்மை ஆட்சி செய்வதற்கான இனம் தமிழினம் என்பதை சர்வதேசத்தை ஏற்றுக்கொள்ள வைக்கக்கூடிய, உணர்ச்சிவசப்பட்ட நிலைகளுக்கு அப்பாற்பட்ட ஆக்கபூர்வமான அரசியல் செயற்பாட்டு பொறிமுறையொன்றினை உருவாக்க வேண்டும்.
இவையனைத்தையும் ஒருங்கிணைப்பதற்கான ஒரு கூட்டிணைப்பு செயலகம் உருவாக்கப்பட வேண்டும். குறைந்தது மூன்று மாதத்துக்குகிடையில் செயற்பாடுகள் தொடர்பான இடைக்கால கண்காணிப்பும், மதிப்பீடும் மேற்கொள்ள வேண்டும். ஆண்டுதோறும் நிலையான கண்காணிப்பும், மதிப்பீடும் மேற்கொள்ள வேண்டும்.
இந்த கட்டுரையின் பிரதான பகுதி புலம்பெயர் கட்டமைப்புகளையே இலக்குவைத்து எழுதப்பட்டுள்ளதாயினும், தாயகத்திலுள்ள பொறுப்பும், பொருத்தமுடையவர்களிடம் ஆழமான முறையில் விரிவாக கலந்தாலோசித்தே அனைத்து பணிகளையும் முன்னெடுப்பது ஆரோக்கியமானது. புலம்பெயர் தமிழர்களது போராட்டமானது தாயகத்திலுள்ள மக்களுக்கானது. ஆகவே, அவர்களது அபிலாசைகள், தேவைகளை அறிந்து அதற்கேற்ற வகையிலேயே முன்னனெடுப்பது சாலப்பொருத்தமாகும்.