தா.பாலகணேசன்
விடுதலைக்காக உழைத்தவர் பலரும்
ஒதுங்கியிருக்கக் கண்டேன்
அன்பின் தலைவரைக் கண்டு
அவர்களின் ஆழ்ந்த துயரெலாம் பேசினேன்
அவருக்கு அங்கேயிருந்த ஆயிரம் வேலைப்பழுவின் மத்தியிலும்
இன்முகம் காட்டியெனை வரவேற்றார்
-மக்கள் எப்படியிருக்கிறார்கள்?
ஏதோ இருக்கிறார்கள் என்ற பதிலால்
மின்னல் கீற்றினையொத்த
மெல்லிய கோபக்கனல் மின்னி மறைந்ததொருகால்,
வருவீர்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்
- எனது வருகைக்காகக் காத்திருப்பதா?
சற்று இடியும் முழக்கமும் கலந்து
ஓடிக் கறுத்த முகத்தோடு,
விடுதலைக்கான பாதைகள் காத்திருப்பதால் திறக்கப்படுமா?
விடுதலைக்காகப் பணிபுரிபவர்கள் விடுதலையாகி இருக்கிறார்களா?
நீங்கள் விடுதலை அடையாமல்
மக்களின் விடுதலையை வென்றெடுக்க முடியுமா
வேண்டாதவற்றை முதலில் விட்டொழித்தலே விடுதலை
விடுதலைக்கான ஒரு வெளியை அகலித்துச் செல்லும்பொழுது
அங்கு நான் இருக்கமாட்டேனா?
விடுதலையின் பெயராலண்ண
கனபேர் காசடிச்சுப்போட்டினம்
அது மட்டுமல்ல அண்ண
மொத்தமாகவும் சில்லறையாகவும் இயக்கத்தை விற்கினம்
-நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறியள்?
மழையாய் இறங்கியது கண்ணீர்
ஒற்றுமை பற்றி எல்லோரும் ஒன்றாய் நின்று பேசினோம்
ஆனால் உளத்துக்குள் ஆயிரம் பிரிவுகள்
அவையும் சாத்தியமில்லை
இருப்பினும் விடுதலைச் சக்தியாய் அனைவரும் பிறக்கும் வண்ணம்
ஆயிரம் கருத்துக்கள் முன்வைக்கிறோம்
எங்கட மொழி, எங்கட நிலம், எங்கட வாழ்க்கை, எங்கட மக்கள் என
மீண்டும் தொடர் உழைப்பு இயக்கம்தான்.
ஆனாலும் அண்ணே எங்களுக்குள்ள நாங்கள் இணைய முடியாமல்
தண்டவாளம் போல இருக்கிறம்
-அப்படி நல்ல பாதையாய் இருந்து
எல்லோரும் பயணம் செய்யக்கூடிய
விடுதலை ரயிலை ஓட்டலாம்தானே?
நல்ல சாரதியள் இல்லை அண்ண
-உங்களால் முடியாதா?
உருப்படியாச்செய்ய எங்களால் ஏதும் முடியுதில்லை
-எனது ஆன்ம நெருப்புப்பொறியை எங்கெல்லாம் விதைத்திருக்கிறேன்
அதிலிருந்து ஒரு பொறிதானும்?
விடுதலைக்கான பாதைகள் குறுகி வளையலாகப் போகிறதண்ணே
தோள் முழுக்கப்பாரம்
வழி நீட்டுக்கும் சுமையோட நடக்கமுடியாமல் இருக்கு
களைப்பு, சோர்வு
தைரியம் தொலைந்துகொண்டு போகிறது.
வீரமுள்ளவர்கள் மடிந்துவிட்டார்கள்
வீரியமில்லாதவர்கள்
நரியின் மூளை இருந்ததால் தப்பிப் பிழைக்கிறார்கள்
பித்தலாட்டங்கள், பிழைப்புவாதங்கள்,
எரியிற வீட்டில புடுங்கினகொள்ளி லாபம் என்ற சிந்தையோட சிலர்
அக்கவெக்க, ஆக்கப்பொறாமை, தோல்வி
எல்லாப் பாதைகளும் இருட்டி அடைப்பட்டுக்கிடக்கு
இனியொரு பாதை, இனியொரு பயணம், இனியொரு வாழ்க்கை
சாத்தியமாகுமோ தெரியேல்ல
மீள் கட்டமைப்பு கடினமான பாதை
-நெருப்பாய் கனலும் என் விடுதலைக் குஞ்சை
அகத்துள் அடைகாத்து வைத்திருக்கிறீர்களா?
அது ஒங்கி வளர்கிறதா?
எல்லோருக்குள்ளும் காலாகாலமாய்
கனலும் சக்தியை அது கொண்டிருக்காதா
அத வளர்க்க 'நான்' அழிந்துபோகிறது அண்ண
- 'நான்' அழிந்து போகையில் விடுதலைக்கான பெரும் பாதை
அகலிப்பதைக் காண்கிறாயா?
ஓமண்ண
-அகலி
ஓர் அறநெறி யுகத்தை வளர்.
அப்போ காலத்தையும் வெளியையும் கடந்து
ஒரு பேராற்றலாய் பெரும் சக்தியாய்
விடுதலைப் பேரொளியாய்
நிற்கப்போவது யார்?
விடுதலைச் சக்திதான்!