கிரிஷாந்
யாருடையதோ ஒரு நிலவை
எரித்துவிட்டது பகல்
தேம்பியழுகிறார்கள்.
நட்சத்திரங்களையும் தேவதைகளையும்
விசாரித்தனர்
இறுகிய தீயைப் போல்
எரிந்தது பகல்.
பின்னர்
நிலவு பற்றிய கனவுகள்
பகலிலும் வரத் தொடங்கின.
விம்மி விம்மி அழுதனர்.
பின்னொரு பொழுதில்
இருள் அவிழ்ந்தது
பேரழகின் தனிமையை திறந்தது
நிலா! நடசத்திரங்கள்!
இது எப்படி ? ஆனால் அம்மா தான் சொல்கிறாளே!
அந்தக் குழந்தையின் கண்களுக்குள்
அப்படியே விழுந்து விடுகிறது
இன்னுமொரு நிலவும்
சில நட்சத்திரங்களும்
***
தகிக்கும் நாட்கள்
மணலாய் எரிகிறது காலம்
பெரும் பகலை விழுங்க
அசைகிறது நிகழ்
தகிக்கும் நாட்களெல்லாம் இப்படித்தான்
கைகளில் பிசைகிற நாற்றம்
கூடையில் அழுகிய முட்டைகள்
குளிக்காத பிணங்கள்
முழுவதும் வெறுக்கத்தக்கது.
தனித்த வெயில்
நிழல் கருகிய வாசம்
கால்களை சிராய்க்கும் மண் வெடிப்புகள்.
குத்தி நெளிகிறது
காலப் புழுக்கள்.
தசையிலும் நரம்பிலும்
ஊர்ந்தபடி
ஊர்ந்தபடி